கடந்த ஆண்டு, என்டிடிவி நிறுவனத்தை அதானி குழுமம் கைப்பற்றியது. அதன் பின்னர், என்டிடிவி நிர்வாகக் குழுவில் அதானி குழுமத்தை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டனர். அதன்படி, நியமிக்கப்பட்ட அமன் குமார் சிங், தற்போது என்டிடிவி நிர்வாகக் குழுவில் இருந்து விலகி உள்ளார். என்டிடிவியில் இருந்து வெளியாகும் அதானி குழுமத்தை சேர்ந்த இரண்டாவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. பங்குச் சந்தை ஆணையத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இவரது பதவிக்காலம் ஏப்ரல் 1ம் தேதி உடன் நிறைவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஏஎஸ் அதிகாரியான அமன் குமார் சிங், சத்தீஸ்கர் மாநில அரசில் தீவிர பாஜக செயற்பாட்டில் உள்ளார். மேலும், முதலமைச்சருக்கு முதன்மை செயலாளர் ஆக பணியாற்றி வந்தார். அதன் பின்னர், கடந்த நவம்பர் மாதத்தில், அதானி குழுமத்தில் இணைந்து, என்டிடிவி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே வேளையில், அவரது மீதும் அவரது மனைவி மீதும் சொத்து வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையில், மார்ச் மாதத்தில் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, என்டிடிவியிலிருந்து விலகிய செய்தி வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.