ஓய்வூதிய சீர்திருத்த மசோதா அவசியம் தேவை என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் தெரிவித்தார்.
பிரான்ஸ் நாட்டில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62-ல் இருந்து 64-ஆக உயர்த்த அதிபர் இம்மானுவேல் மெக்ரான் முடிவு செய்தார். இதற்காக ஓய்வூதிய சீர்திருத்த மசோதாவை அவர் கொண்டு வந்தார். இந்த மசோதாவுக்கு மக்கள், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றாமல் சட்டமாக்கும் நடவடிக்கைகளை அதிபர் மெக்ரான் மேற்கொண்டார். இதனால் போராட்டம் தீவிரம் அடைந்தது.
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் திட்டம் தொடர்பாக பிரான்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இதற்கிடையே, இத்திட்டத்துக்கு கோர்ட்டு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து அரசு ஊழியர் ஓய்வு வயதை 62-ல் இருந்து 64 ஆக உயர்த்தும் சட்டத்தை அதிபர் மெக்ரான் அமலுக்கு கொண்டு வந்தார். இச்சட்டத்தை அரசிதழில் பிரான்ஸ் அரசு வெளியிட்டுள்ளது. இதன்மூலம் மக்களின் போராட்டங்களை மீறி சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இது போராட்டக்காரர்களை ஆத்திரமடையச் செய்துள்ளது. நாடு முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், ஓய்வூதிய சீர்திருத்த மசோதா தேவை. அனைவரின் ஓய்வூதியத்திற்கும் உத்தரவாதம் அளிக்க இந்த மாற்றங்கள் தேவைப்பட்டன. படிப்படியாக அதிகமாக வேலை செய்வது நமது நாட்டிற்கு அதிக செல்வத்தை உருவாக்குகிறது என தெரிவித்தார்.