செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக, சீனா Zhurong என்ற ரோவரை அனுப்பியிருந்தது. இந்நிலையில், இந்த ரோவர் எந்த அசைவும் இல்லாமல் இருப்பதாக, நாசா வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, சீனா நெடு நாட்களாக விளக்கம் அளிக்காமல் இருந்த நிலையில், முதல் முறையாக, தற்போது மௌனத்தை கலைத்துள்ளது.
சீனாவின் Zhurong ரோவர், நெடு நாட்களாக ‘ஸ்லீப்’ மோடில் உள்ளதாகவும், அதன் மீது தூசி மற்றும் மணல் அதிக அளவில் படிந்துள்ளதாகவும் சீனா கூறியுள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய வடிவமைப்பாளர் இந்த தகவல்களை தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஸ்லீப் மோட் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்ததாகவும் கூறியுள்ளார். “கடந்த மே மாதம் ஸ்லீப் மோடுக்கு செல்லும் ரோவர், டிசம்பர் மாதம் தானாக விழிப்பு நிலைக்கு வருமாறு வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால், அதிக அளவில் தூசி படிந்ததால், ரோவரின் இயக்கத்திற்கு தேவையான மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளி மூலம் ரோபவருக்கு எரிசக்தி கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், தூசிப் படிவம் காரணமாக மின் உற்பத்தி நிகழவில்லை. எனவே, இந்த ரோவர் விழிப்பு நிலைக்கு வராமல் உள்ளது.” - இவ்வாறு தெரிவித்துள்ளார்.