நெற்பயிரில் விதைப் பண்ணை அமைத்து விவசாயிகள் அதிக லாபம் பெறலாம் என வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குநர் அலுவலகம் தெரிவிக்கையில், வேளாண்மை விரிவாக்க மையங்களளிலும் அல்லது விற்பனை உரிமம் பெற்ற தனியார் விதை விற்பனை நிலையங்களிலும் நெல் விதைப்பண்ணை அமைப்பதற்கு தேவையான கருவிதை மற்றும் ஆதார நிலை விதைகளை வாங்கிக்கொள்ளலாம்.
குறுகிய கால ரகங்கள் அல்லது மத்திய கால ரக விதைகளை விதைப்பண்ணை அமைக்க தேர்வு செய்யலாம். விதைகள் வாங்கும் போது காலக்கெடு உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும். விற்பனை ரசீது மற்றும் சான்றட்டைகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும். சாதாரண நெல் நடவு முறையில் ஒரு ஏக்கருக்கு 20 கிலோவும், வரிசை நடவு முறையில் ஒரு ஏக்கருக்கு 15 கிலோவும் விதைகள் பயன்படுத்தியிருக்க வேண்டும்.
விதைப்பண்ணையை சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மூலமாகவோ அல்லது தனியார் விதை உற்பத்தியாளர்கள் மூலமாகவோ சிவகங்கை விதைச்சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தில் விதைத்த 35 நாட்களுக்குள் முன்பு பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு விதைப்பண்ணை அமைப்பதால் விவசாயிகளுக்கு 30 சதவீதம் வரை கூடுதல் மகசூல் கிடைக்கிறது. கலப்படம் அற்ற தரமான விதை உற்பத்திக்கு அதிக கொள்முதல் விலையும் கிடைக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.