சூடான் நாட்டில் உள்நாட்டு போர் தீவிரமாக நடந்து வருகிறது. ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே, சூடான் தலைநகரில் அடிக்கடி மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், தலைநகரில் உள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு உணவுப் பொருட்களை கொண்டு சேர்ப்பது மிகவும் கடினமானதாக மாறியது. எனவே, காப்பகத்திற்கு உணவு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் நிறுத்தப்பட்டன. இதனால், காப்பகத்தில் இருந்த குழந்தைகள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். உணவு கிடைக்காமலும், காய்ச்சலுக்கு கூட சிகிச்சை கிடைக்காமலும், மிகவும் அவதியுற்றுள்ளனர். இதன் காரணமாக, காப்பகத்தில் இருந்த 71 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம், சர்வதேச அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில், ஐநா சபையின் குழந்தைகள் அமைப்பான யுனிசெப் தலையிட்டு, காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 300 குழந்தைகளை பத்திரமாக வெளியேற்றியது. தற்போது, குழந்தைகள் அனைவரும் மாற்று இடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.