கடந்த 2016 முதல் 2020 வரை, கிட்டத்தட்ட 700 இந்திய மாணவர்கள் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து கனடாவுக்குள் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த விவகாரத்தில், மாணவர்கள் மீது தவறு இல்லை எனவும், அவர்களை கனடாவுக்கு அனுப்பிய ஏஜென்ட் மீதே தவறு எனவும் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக பஞ்சாபி சங்கங்களின் தலைவரும், ஆம் ஆத்மி எம்பியுமான விக்ரம்ஜித் சிங் சானே, இது தொடர்பாக கனடா அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளதை அடுத்து, மாணவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையை கனடா நிறுத்தி வைத்துள்ளது. இதனால், கனடாவில் போராடி வரும் இந்திய மாணவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
கனடாவில், இல்லாத கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் பெயரில், இந்திய மாணவர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டு, மாணவர்கள் கனடா சென்றுள்ளனர். அங்கு சென்ற பின்னர் உண்மை தெரியவே, அவர்களுக்கு வேறொரு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் கல்வி பயில அனுமதி கொடுக்கப்பட்டு, கல்வி பயின்று வந்துள்ளனர். இந்த விவகாரத்தில், மாணவர்களுக்கு போலி அனுமதி கடிதங்களை கொடுத்தவர் பிரிஜேஷ் மிஸ்ரா என்ற ஏஜென்ட் ஆவார். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கடிதங்களை சரிபார்க்காமல் விசா வழங்கப்பட்டுள்ளது. அதே வேளையில், கனடாவுக்குள் நுழைய குடியுரிமைத்துறை அனுமதி வழங்கியுள்ளது. எனவே, மாணவர்கள் மீது தவறு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.