அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள பிபர்ஜாய் அதி தீவிர புயல், நாளை பிற்பகல் குஜராத் மாநிலத்தில் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்ச் வளைகுடா பகுதியில் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், கரையோர மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், பேரிடரை எதிர்கொள்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், குஜராத் மாநிலத்தில் 95 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதில், 67 ரயில் சேவைகள் முழுவதுமாகவும், 30க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் பகுதியாகவும், நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தாதர் புஜ் எக்ஸ்பிரஸ், பந்த்ரா புஜ் கட்ச் எக்ஸ்பிரஸ், ஓகா ராஜ்கோட், ஓகா வேராவல், ஓகா பவ்நகர் எக்ஸ்பிரஸ், வேராவல் அகமதாபாத் எக்ஸ்பிரஸ், வேராவல் ராஜ்கோட் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.