உகாண்டாவில் உள்ள பள்ளி ஒன்றில், ஐ எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஏடிஎப் என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 38 மாணவர்கள் உட்பட 42 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஏடிஎப் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 5 பேர், காங்கோ எல்லையில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உகாண்டாவின் பாண்டுவே நகரில் உள்ள நடுநிலைப்பள்ளியில் தாக்குதல் நடத்தியுள்ளனர். பள்ளியின் பாதுகாவலர் ஒருவர் மற்றும் 2 பொதுமக்களை கொன்று விட்டு பள்ளி வளாகத்திற்குள் அவர்கள் நுழைந்துள்ளனர். அங்கு, மாணவர்கள் மீது சரமாரி தாக்குதலில் ஈடுபட்ட அவர்கள், மாணவர்கள் தங்கியிருந்த விடுதி பகுதிக்கு தீ வைத்தனர். இதில் பல மாணவர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பல மாணவர்கள் துப்பாக்கி குண்டு பாய்ந்தும் கத்திக்குத்து காரணமாகவும் உயிரிழந்துள்ளனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், பள்ளியின் உணவு கிடங்கை சூறையாடி, 6 மாணவர்களையும் பிடித்து சென்றதாக கூறப்படுகிறது. உகாண்டா நாட்டு ராணுவத்தினர் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.