ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 999 ரூபாயில் இணைய வசதி கொண்ட கைபேசியை அறிமுகம் செய்ய உள்ளதாக இன்று அறிவித்துள்ளது. மிகக் குறைந்த விலையில் இணைய வசதி கொண்ட கைபேசியின் அறிமுகம், ஜூலை 7ஆம் தேதி முதல் சோதனை அடிப்படையில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ‘ஜியோ பாரத்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை வெளியிட்டு பேசிய ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ஆகாஷ் அம்பானி, “உலகமே 5ஜி தொழில்நுட்பத்தை நோக்கி நகர்ந்து வரும் வேளையில், இந்தியாவில் உள்ள 25 கோடி மக்கள் 2ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்துப்பவர்களாகவே உள்ளனர். அதனை கருத்தில் கொண்டு, ஜியோ பாரத் தொலைபேசி அறிமுகம் செய்யப்படுகிறது” என்று கூறியுள்ளார். இந்த கைபேசியில், மாதம் ஒன்றுக்கு 123 ரூபாய் கட்டணமாக பெறப்படுகிறது. அதற்கு, வரம்பில்லா தொலைபேசி அழைப்புகள், 14 ஜிபி மொபைல் டேட்டா ஆகியவை வழங்கப்படுகிறது. இது, மற்ற ஸ்மார்ட் போன் சந்தா கட்டணங்களுடன் ஒப்பிடுகையில் 30% குறைவாகும் என்று கூறப்படுகிறது.