ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 18 பேருக்கு பார்வை இழப்பு நேர்ந்துள்ளது. இது இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சிரஞ்சீவி சுகாதார திட்டம் என்ற பெயரில், ராஜஸ்தான் மாநில அரசு சார்பாக, இலவச கண் அறுவை சிகிச்சைகள் செய்து தரப்படுகிறது. இந்த திட்டத்தின் படி, அண்மையில் சவாய் மான்சிங் மருத்துவமனையில், கண் புரை நீக்க அறுவை சிகிச்சை செய்து கொண்ட 18 பேருக்கு, பார்வை பறிபோய் உள்ளது. சில நோயாளிகளுக்கு கண்களில் வலி ஏற்படவே, அவர்களுக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனாலும் அவர்களுக்கு பார்வை திரும்ப வில்லை. இதுகுறித்து பேசிய கண் சிகிச்சை பிரிவு அதிகாரிகள், “மருத்துவர்கள் அளித்த சிகிச்சையில் குறைபாடுகள் இல்லை. என்ன காரணத்தினால் பார்வை பறிபோனது என்பது குறித்து அறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளனர்.














