வாரணாசியில் அமைந்துள்ள கியான்வாபி மசூதியில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த இருந்தனர். இன்று அவர்களின் ஆய்வு தொடங்கப்பட இருந்த நிலையில், வரும் புதன்கிழமை மாலை வரை இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
கியான்வாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து, மசூதி தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவசர வழக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரணை செய்யப்பட்ட இந்த வழக்கில், ஜூலை 26 வரை ஆய்வுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை மசூதி வளாகத்தில் தொல்லியல் துறை அதிகாரிகள் அறிவியல் பூர்வமான ஆய்வை தொடங்க இருந்தனர். மசூதிக்குள், தொல்லியல் துறை அதிகாரிகள், வழக்கு தொடர்ந்த 4 இந்து பெண்கள், வழக்கறிஞர்கள் மற்றும் மசூதி நிர்வாகத்தினர் ஆகியோர் சென்றனர். இந்த பகுதியில் இது தொடர்பாக வன்முறை சம்பவங்கள் அரங்கேறலாம் என்று அஞ்சப் பட்டதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். அதற்குள்ளாக, இடைக்கால தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.