உலகிலேயே முதல் முறையாக, மனித மூளையில் உயிருள்ள நிலையில் புழு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த 64 வயது பெண்மணி ஒருவரின் மூளையில் Ophidascaris robertsi என்ற ஒட்டுண்ணி வகை புழு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 8 சென்டி மீட்டர் நீளமுடைய இந்த புழு, உயிர் உள்ள நிலையில் காணப்பட்டுள்ளது மருத்துவ உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது, இது அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஜனவரி 2021 ல், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்மணிக்கு, தொடர்ந்து, வறட்டு இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பின்னர், 2022 ஆம் ஆண்டு, ஞாபக மறதி மற்றும் மனச்சோர்வு பாதிப்புகள் ஏற்பட்டன. இதனை அடுத்து, எம் ஆர் ஐ ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்ட போது, அவரது மூளையில் உயிருள்ள நிலையில் புழு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவரது உடலில் காணப்பட்ட புழு, ஒட்டுண்ணி வகையை சேர்ந்ததாகும். இது பாம்புகள் மற்றும் கங்காருக்களின் உடம்பில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக இது மனிதர்கள் உடலில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.