நாட்டின் முதல் யுபிஐ-ஏடிஎம், ஹிட்டாச்சி பேமண்ட் சர்வீசஸ் நிறுவனம் மூலம் ஒயிட் லேபிள் ஏடிஎம் மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த ஏடிஎம் சேவை, நேஷனல் பேமண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுடன் இணைந்து செயலாக்கத்துக்கு கொண்டுவரப்பட்டது. இது டெபிட் கார்டுகள் இன்றி வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும் புதிய வசதியை உறுதி செய்கிறது.
இதுகுறித்து என்பிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏடிஎம் பரிவர்த்தனையில் வாடிக்கையாளர்கள் கார்டுகளின் தேவையின்றி பணம் எடுக்கும் புதிய வசதியை அறிமுகம் செய்கிறோம். தற்போதுள்ள ஏடிஎம்களில் யுபிஐ வசதியை ஒருங்கிணைப்பதன் மூலம் கார்டுகளின் துணையின்றி வாடிக்கையாளர்கள் ஏடிஎம்-களில் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும். இதனால் தொலைதூரம் வசிப்பவர்கள் பெரிதும் பயனடைவர் என்று தெரிவித்துள்ளது.
வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம்-ல் யுபிஐ அட்டையில்லா சேவையை தேர்வு செய்ய வேண்டும். எவ்வளவு பணம் எடுக்க வேண்டும் என்பதை திரையில் குறிப்பிட வேண்டும். பின்னர் திரையில் தோன்றும் கியூஆர் கோடை செல் போனை பயன்படுத்தி ஸ்கேன் செய்தவுடன் யுபிஐ பின் நம்பரை பதிவிட்டு பரிவர்த்தனைக்கான செயல்முறையை உறுதிப்படுத்த வேண்டும். பிறகு வாடிக்கையாளர் தங்களுக்கு தேவையான பணத்தை ஏடிஎம்-ல் பெற்றுக் கொள்ள முடியும். தற்போது அட்டை இல்லாமல் பணம் எடுக்க மொபைல் எண், ஓடிபி ஆகியவை தேவை.