விண்வெளி துறையில் பல்வேறு ஆய்வுகளை வெற்றிகரமாக நடத்தி வரும் இந்தியா, அடுத்த கட்டமாக, ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட உள்ளது. இதற்காக, சமுத்திரயான் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி, வங்க கடல் பகுதியில், மாங்கனீஸ், கோபால்ட், நிக்கல், ஹைட்ரோ தெர்மல் சல்பைட், கேஸ் ஹைட்ரேட்ஸ் போன்ற தாதுக்கள் கண்டறியப்பட உள்ளன.
அண்மையில், அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்வையிட, ஆழ்கடலுக்கு அனுப்பப்பட்ட டைட்டன் நீர்மூழ்கி வெடித்துச் சிதறியது. இந்த நிலையில், சமுத்திரயான் திட்டத்தில் ஆழ்கடலுக்கு அனுப்பப்படும் கலத்தை திறன் வாய்ந்ததாக அமைக்கும் முக்கியத்துவம் எழுந்துள்ளது. அதன் படி, ஆழ்கடல் கலத்தின் திறனை மறு ஆய்வு செய்யும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மத்ஸ்யா 6000 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கலத்தின் முதற்கட்ட பரிசோதனை 2024 தொடக்கத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. ஆழ்கடலில் 500 மீட்டர் ஆழம் வரை சென்று, இந்த கலம் பரிசோதனை செய்யப்படும் என சொல்லப்பட்டுள்ளது. வரும் 2026 ஆம் ஆண்டில், சமுத்திரயான் திட்டம் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்ஸ்யா 6000 கலத்தில், 3 பேர் பயணிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், பிரான்சு, சீனா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, மனிதர்கள் பயணிக்கும் ஆழ்கடல் கலத்தை உருவாக்கும் நாடாக, இந்தியா பட்டியலில் இணைய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.