ஹரியானா மாநிலத்தின் நூஹ் பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன்னால் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. இந்த வன்முறையில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ மாமன்கான் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது கைது நடவடிக்கை காரணமாக, அங்கு அசம்பாவிதங்கள் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இன்று காலை 10 மணி முதல் நாளை மதியம் 12 மணி வரை கைபேசி இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், நூஹ் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எம் எல் ஏ வின் கைது நடவடிக்கை மற்றும் ஏற்கனவே அந்த பகுதியில் காணப்படும் கலவர சூழல் போன்றவை அசம்பாவிதங்களை ஏற்படுத்தக் கூடும் என கருதப்படுகிறது. குறிப்பாக, போலியான செய்திகள் மற்றும் வதந்திகள் சமூக ஊடகங்கள் மூலமாக பரவலாம் என கூறப்படுகிறது. இதன் காரணமாக, அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதை பயன்படுத்தி, இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், ரீசார்ஜ் செய்வது, சாதாரண தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்வது, இணையவழி வங்கி பரிமாற்றங்கள் மேற்கொள்வது போன்றவற்றுக்கு எந்த தடையும் இல்லை என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.