கனடாவில் அண்மைக்காலமாக இனவாத வெறுப்புத் தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், அங்கு செல்லும் இந்திய மாணவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள மத்திய அரசின் செய்திக் குறிப்பில், “வெறுப்புத் தாக்குதல்கள், பிரிவினைவாத வன்முறைகள், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் கனடாவில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. தூதரகம் வாயிலாக கனடா நாட்டிற்கு இந்தக் குற்றங்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், குற்றவாளிகள் இதுவரை நீதியின் முன் நிறுத்தப்படவில்லை.
அதிகரிக்கும் குற்றங்களைக் கருத்தில் கொண்டு இந்திய மக்களும், மாணவர்களும் இந்தியாவிலிருந்து கனடாவுக்குச் செல்லும்போது கவனத்துடன் இருக்க வேண்டும். ஏற்கெனவே அங்கே வாழும் இந்திய மாணவர்களும், இந்தியர்களும் விழிப்புடன் இருப்பது அவசியம். அங்குள்ள இந்தியர்கள் ஒட்டாவா, டொரன்டோ, வான்கூரில் உள்ள தூதரகங்களில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அப்போதுதான் ஏதேனும் அவசரநிலை ஏற்படும்போது உங்களால் துணைத் தூதரகம், தூதரக ஜெனரலுடன் தொடர்புகொள்ள எளிதாக இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.