அதானி குழுமம், அடுத்த 10 ஆண்டுகளில், 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளதாக கௌதம் அதானி தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்ற ஃபோர்ப்ஸ் குளோபல் சிஇஓ மாநாட்டில் இதனை அவர் தெரிவித்தார். அத்துடன், இந்தியா, உலகின் எரிசக்தி ஏற்றுமதி மையமாக மாறும் என்று அவர் கூறியுள்ளார். மேலும், எரிசக்தி ஆற்றல் மாற்றத்தில் 70% முதலீடுகளை செய்ய, அதானி குழுமம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி துறையில், மேலும் 45 வாட் திறனை அதிகரிக்க, நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக, அவர் கூறினார். மேலும், ஒருங்கிணைந்த பசுமை ஹைட்ரஜன் தொடர்பான துறையில், 70 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்ய உள்ளதாக கூறினார்.
அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு 260 பில்லியன் டாலர்களாக உள்ளது. இதுவே இந்தியாவில் அதி வேகமாக வளர்ச்சி அடைந்த நிறுவனம் ஆகும். துறைமுகங்களில் இருந்து மின் உற்பத்தி வரை பல்வேறு தொழில்களில் இந்தக் குழுமம் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, சூரிய மின் உற்பத்தியில் உலகளாவிய முறையில் முன்னணியில் உள்ளது. இந்நிலையில், சூரிய மின் உற்பத்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் மேலும் வளர்ச்சி அடைய நிறுவனம் முனைப்பு காட்டி வருவதாக, சிங்கப்பூர் மாநாட்டில் கௌதம் அதானி பேசினார். மேலும், அதற்காக, 3 கிகா தொழிற்சாலைகளை நிறுவ திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். இந்தியாவில், 10 கிகாவாட் திறனில் சூரிய மின் உற்பத்தி நிலையம், 10 கிகாவாட் திறனில் காற்றாலை மற்றும் 5 கிகாவாட் திறனில் பசுமை ஹைட்ரஜன் தொழிற்சாலை போன்றவை அதானி குழுமத்தின் சார்பில் அமைக்கப்பட உள்ளதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவில் டேட்டா சென்டர் துறை அதிவேக வளர்ச்சியை சந்தித்து வருகிறது என்றார். மேலும், “இந்த துறையே அதிகப்படியான ஆற்றலை உபயோகிக்கும் துறையாக உள்ளது. எனவே, பசுமை டேட்டா சென்டர்கள் அமைப்பதை நோக்கி எங்கள் நிறுவனம் செயல்பட உள்ளது” என்று அறிவித்தார். மேலும், “இந்தியாவில் எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவின் வளர்ச்சிப் பாதைக்கு இதுவே ஆரம்பப் புள்ளி” என்று கூறினார்.