தமிழர்கள் கட்டிய அனைத்துக் கோவில்களுமே, கட்டிடக் கலை முதல் புவியியல் அமைப்பு வரை, இன்றைய நவீன விஞ்ஞானத்திற்குச் சவால் விடும் வகையிலேயே கட்டப்பட்டுள்ளன. அந்த வகையில், சிதம்பரம் நடராஜர் கோவில் தமிழரின் அறிவியலைப் பறை சாற்றும் முக்கியக் கோவிலாக உள்ளது.
‘தில்லை’ என்று பழங்காலத்தில் வழங்கப்பட்ட சிதம்பரம் 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே தோன்றியதாக நம்பப்படுகிறது. சிதம்பரம் நடராஜர் கோவில் 40 ஏக்கர் பரப்பளவில், நான்கு கோபுரங்களும், ஐந்து சபைகளும் கொண்டு தமிழகத்தின் பெரிய கோவில்களுள் ஒன்றாக உள்ளது. முற்றிலும் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட இக்கோவிலின் கட்டிடப் பகுதிகள் மட்டுமே சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன. இந்த அற்புத ஆலயத்தின் சில அதிசயங்கள் இதோ:
ஊனுடம்பு ஆலயம்
அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைக்கும் புள்ளியாகத் திகழும் திருமூலரின் திருமந்திரம், “மனிதரின் உடம்புதான் ஆலயம் என்பதை விளக்குவதே சிதம்பரம் நடராஜர் கோவில்” என்பதை
"மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே"
என்றப் பாடல் வரிகள் மூலமாக விளக்குகிறது. இந்தக் கருத்தை கோவிலின் கட்டிடக் கலையும் பின்வருமாறு விளக்குகிறது:
- மனித உடல் ஐந்து அடுக்குகளைக் கொண்டத் தோலினால் ஆனது என்பதைக் கோவிலின் ஐந்து பிரகாரங்கள் சொல்கின்றன.
- மனிதரின் இதயம் இடப்புறம் அமைந்திருப்பதைப் போல, கோயிலின் கருவறை, மையப்பகுதியில் இல்லாமல் இடதுபுறமாகச் சற்று நகர்ந்து இருக்கிறது.
- மனிதர்கள் ஒரு நாளைக்கு 21,600 முறை மூச்சுவிடுவதை விளக்கும் வகையில் கோயிலின் கருவறையின் மீதுள்ள கூரை 21600 ஓடுகளால் வேயப்பட்டுள்ளது.
- மனிதருக்குள் 72000 நாடிகள் (நரம்புகள்) ஓடுகின்றன. அதேபோல பொன்னால் வேயப்பட்டக் கூரையில் 72000 ஆணிகள் அறையப்பட்டுள்ளன.
- மனித உடலில் இருக்கும் 9 வாயில்களைக் குறிப்பதாக, கோவிலுக்கு 9 நுழைவு வாயில்கள் உள்ளன.
இவ்வாறு, திருமூலரின் “ஊனுடம்பு ஆலயம்” என்ற தத்துவத்தை விளக்கும் வகையில் இந்தக் கோவில் உருவாக்கப்பட்டுள்ளது இதன் தனித்துவமாகும்.
கோவிலின் அறிவியல்
- பஞ்ச பூதக் கோயில்களில், ஆகாயம், காற்று, நிலம் ஆகியவற்றை முறையே குறிக்கும் சிதம்பரம், காலஹஸ்தி மற்றும் காஞ்சிபுரம் ஆலயங்கள் சரியாக ஒரே நேர்கோட்டில் - 79 பாகை, 41 கலை கிழக்கு தீர்க்கரேகையில் (79 Degrees, 41 minutes East Longitude) அமைந்துள்ளது. நாம் வானத்தின் மேலிருந்துப் பார்த்தால் மட்டுமே அறிய முடியுமாறு உள்ள இந்தத் துல்லியமானக் கணிதம், எவ்விதத் தொழில்நுட்ப வசதிகளும் இல்லாதக் காலத்தில் கணிக்கப்பட்டது ஒரு பொறியியல், புவியியல் மற்றும் வானவியலின் உச்சகட்ட அதிசயமாகப் போற்றப்படுகிறது.
- நடராஜரின் நடனம் ஆக்கல், அழித்தல், காத்தல் ஆகிய மூன்று செயல்களை விளக்குகிறது என்பது சான்றோர்களின் கருத்து. அதோடு, இவை மூன்றும் இயற்பியல் விதியின் படி, அணுவின் மூன்று செயல்களோடு ஒத்துப்போவதால், நடராஜரின் நடன வடிவம் ‘COSMIC DANCE’ என்ற பெயரில் அண்டத்தின் இயக்க வடிவமாகப் பார்க்கப்படுகிறது. இந்த அறிவியல் உண்மையைச் சிறப்பிக்கும் வகையில், உலகின் பெரிய அணு ஆராய்ச்சி அமைப்பான CERNல் நடராஜரின் சிலை வைக்கப்பட்டுள்ளது.
கட்டிடக் கலை
- கோவிலின் கிழக்குக் கோபுரத்தில் உள்ள 108 பரதநாட்டியச் சிற்பங்கள் சிற்பக்கலையின் சான்றாகவும் பரதக் கலையின் சான்றாகவும் இருக்கின்றன.
- அழகியச் சிற்பங்களுடன் அமைக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபம், கட்டடக்கலையின் அற்புதம் என்று நிபுணர்களால் புகழப்படுகிறது. இந்த மண்டபத்தில் வைத்துதான், இரண்டாம் குலோத்துங்கச் சோழனின் ஆணைக்கிணங்க, 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை “திருத்தொண்டர் புராணம்” என்ற பெயரில் சேக்கிழார் அரங்கேற்றினார்.
- ஒவ்வொரு கோவிலிலும் தமிழர்களின் நீர் மேலாண்மைக்குச் சான்றுகள் உள்ளன. அந்த வகையில், நடராஜர் கோயிலில் பெய்யும் மழை நீர் கோயிலின் வடக்குக் கோபுரம் அருகே பூமிக்கு அடியில் உள்ள பெரிய அளவிலான வடிகால் (வாய்க்கால்) வழியாக, தில்லையம்மன் கோயில் குளத்துக்குச் செல்லுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தக் குளம் நிரம்பியவுடன் அதிலிருக்கும் உபரி நீர் தில்லையம்மன் ஓடைக்குச் செல்லும் வகையிலான வடிகால் வசதி முற்காலத்திலேயே செய்யப்பட்டிருப்பது அனைவராலும் சிறப்பாகப் போற்றப்படுகிறது.
கல்வெட்டுக் குறிப்புகள்
பல மன்னர்கள் அவர்களின் ஆட்சிக் காலத்தில் இக்கோவிலுக்குச் செய்தத் திருப்பணிகளைச் சொல்லும் கல்வெட்டுகள், சோழர்களுக்குப் பின் பாண்டிய மன்னர்களும், அதற்குப் பின்னர் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயரும், இறுதியில் நாயக்க மன்னர்களும் தமிழகத்தை ஆண்டிருப்பதை உறுதி செய்யும் ஆவணங்களாக உள்ளன. அதற்கானச் சில சான்றுகள்:
- முதலாம் பராந்தகச் சோழன் 9 ஆம் நூற்றாண்டில் இச்சிற்றம்பலத்திற்கு பொன் வேய்ந்தான் என்று இங்குள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன. இதனைத் திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் "லெய்டன்" நகரப் பெரியச் செப்பேடுகளும் உறுதி செய்கின்றன.
- சுந்தரபாண்டிய மன்னன் கோவிலின் கிழக்குக் கோபுரத்தைக் கட்டியதும் ராஜேந்திர சோழனின் ஆட்சிக்காலத்தில் “கம்போடியா” நாட்டு அரசன் இக்கோவிலுக்குத் தங்கம் மற்றும் மாணிக்கக் கற்கள் கொண்ட நகைகளைக் கொடுத்தனுப்பியதும் கோவிலின் கல்வெட்டுகள் மூலமாகவும் இலக்கியங்கள் மூலமாகவும் அறியப்படுகிறது.
நாட்டியாஞ்சலி
நாட்டியக் கலைஞர்கள் தங்களுடைய நாட்டியத்தை அர்ப்பணமாக வழங்கும் நாட்டியாஞ்சலி விழா சிதம்பரம் கோவிலின் தனி அடையாளமாகும்.
இத்தனைச் சிறப்புகளைக் கொண்ட இந்தக் கோவில் பெருமளவில் வெளிநாட்டவரை ஈர்ப்பதில் ஐயமில்லை.