தமிழர்கள் நிர்மாணித்தப் பலக் கற்கோவில்களுக்குப் பின் இருக்கும் அறிவியலும், கட்டடவியல் அற்புதங்களும் உலகத்தவர்களை பிரமிக்க வைக்கின்றன. அந்த வகையில், பாண்டியரின் இரண்டாம் தலைநகரமாக விளங்கியத் திருநெல்வேலியில், 14 ஏக்கர் பரப்பளவில், இரட்டைக் கோயில் அமைப்பில், பிரமாண்டமாக அமைந்துள்ள நெல்லையப்பர்-காந்திமதி ஆலயம், சிற்பக்கலைக்கும் கட்டடக் கலைக்கும் பெயர் பெற்று விளங்குகிறது.
2000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததாக அறியப்படும் இந்தக் கோவில், தேவாரம், பெரிய புராணம் மற்றும் திருவிளையாடல் புராணம் ஆகிய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. "திருநெல்வேலிப் பதிகம்" என்ற பெயரில் திருஞானசம்பந்தர் தேவாரம் பாடியிருப்பதால், ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே "திருநெல்வேலி" என்ற பெயர் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது. இந்தக் கோவில், நின்றசீர் நெடுமாறன் எனும் பாண்டிய மன்னனால், கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் திருப்பணி செய்யப்பட்டு, பெரிதாகக் கட்டப்பட்டதும், பின்னர் 17 ஆம் நூற்றாண்டில், திராவிடக் கட்டடக் கலை அமைப்பில், நான்கு ராஜ கோபுரங்களும், சங்கிலி மண்டபமும் கட்டப்பட்டது என்பதும் கோவிலில் உள்ள கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது. இந்தக் கோவிலின் தனிச் சிறப்புகள் பின்வருமாறு:
1. இசைத் தூண்கள்
தமிழர் கட்டிடக் கலையின் உச்சமாக பார்க்கப்படும் இசைத்தூண்கள் இந்தக் கோவிலின் சிறப்பாகும். நெல்லையப்பர் கோயிலின் மணிமண்டபம் மற்றும் காந்திமதி கோவிலின் மணிமண்டபம் ஆகியவற்றில் இரண்டிரண்டாக மொத்தம் நான்கு இசைத் தூண்கள் உள்ளன. ஒவ்வொன்றும் நடுவில் ஒரு பெரிய தூணையும் சுற்றிலும் 48 சிறிய தூண்களையும் கொண்டு, தாள இசைக்கருவிகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோவிலின் கல்வெட்டுகளின் படி, கி.பி. 1546ம் ஆண்டு, வீரசங்கிலி மார்த்தாண்டவர்மன் என்ற திருவிதாங்கூர் மன்னனால் இந்த இசைத்தூண் மண்டபங்கள் கட்டப்பட்டது அறியப்படுகிறது.
2. தாமிர சபை
கீழே மரத்தாலும் மேலே தாமிரத்தாலும் உருவாக்கப்பட்டு, ஏழு அடுக்குகளைக் கொண்டு, கட்டப்பட்டத் தாமிர சபை இந்தக் கோவிலின் அடையாளமாகும். இது தமிழர்களின் அலங்கார அமைப்புகளையும் கட்டிடக் கலை நுணுக்கங்களையும் எடுத்துரைப்பதாக உள்ளது.
3. மரச் சிற்பங்கள்
இந்தக் கோவிலின் மற்றொரு சிறப்பு அடையாளமாக இருப்பது மரச் சிற்பங்களாகும். நுழைவு வாயிலின் கூரையில் உள்ள மரச் சிற்பங்கள் மற்றும் தாமிர சபையின் உட்புறத்தில் உள்ள மரச் சிற்பங்கள் ஆகியன மரச் சிற்பக் கலையின் சிகரமாக அமைகின்றன. இங்குள்ளதைப் போன்ற, காலத்தால் முந்திய, நுணுக்கமான மர வேலைப்பாடுகள் வேறெங்கும் இல்லை.
4. தேர்
தமிழர்களின் பண்பாட்டில் தேர் திருவிழா முக்கிய இடம் பெறுகிறது. இந்தக் கோவிலின் தனிச் சிறப்பாக, 450 டன் எடை கொண்ட தேரும், முக்கிய விழாவாக ஆனி மாதம் நடைபெறும் தேரோட்டமும் இருக்கிறது. இந்தக் கோவிலின் தேர்த் திருவிழாவிற்கு நெடிய வரலாறு உண்டு. 1505ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 515 ஆண்டுகளாகத் தடையின்றி தொடர்ந்து நடத்தப்படும் உலகின் பழமையானத் தேரோட்டம் என்ற புகழுக்குரியது இக்கோவிலாகும். தொழில்நுட்ப வசதிகள் பெருகியதும், பிற இடங்களின் பெரிய வகைத் தேர்கள் அனைத்தும் மனித சக்தியோடு, இயந்திர சக்தியும் கொண்டு இழுக்கப்படுகின்றன. ஆனால், தமிழகத்தின் மூன்றாவது மிகப்பெரியத் தேராக அறியப்படும் நெல்லையப்பர் கோவிலின் தேர், இன்று வரையிலும், முற்றிலும் மனித சக்தியால் மட்டுமே இழுக்கப்படும் இந்தியாவின் மிகப்பெரிய தேர் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
5. சிற்பக் கலைச் சான்றுகள்
- நெல்லையப்பர் கோவிலின் மூன்றாவது பிரகாரத்தில் உள்ள ஆறுமுக நயினார் சிற்பம் ஒரே கல்லால் ஆனதாகும். ஆறுமுகங்கள், பன்னிரு கரங்கள், முருகரின் வடிவம் மற்றும் மயில் என்று அனைத்தும் ஒரே கல்லில் செதுக்கபட்டது சிற்பக்கலையின் சிறந்த வடிவமாகப் பார்க்கப்படுகிறது.
- அழகிய சிற்பங்கள் நிறைந்துள்ள வசந்த மண்டபம், சோமவார மண்டபம், முழுமையாக 1000 தூண்களைக் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், 96 தூண்கள் உடைய ஊஞ்சல் மண்டபம், மகாமண்டபம், நவகிரக மண்டபம் மற்றும் சங்கிலி மண்டபம் ஆகியவற்றின் ஒவ்வொரு தூணும் சிற்ப அதிசயமாக அறிஞர்களால் போற்றப்படுகிறது.
- சிற்பக் கலையின் சிகரமாக, அபிஷேகத்தின் போது மட்டுமே காணமுடியும் வகையில், கோவிலின் மூல லிங்கத்தில் அம்பிகையின் உருவம் தெரிகிறது. இந்த சிற்ப அதிசயம் இந்தக் கோவிலின் தனிச் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது.
- மூன்று தலைகள், மூன்று கால்கள், மூன்று கைகளுடன் காணப்படும் சுரதேவர் சிற்பமும் தமிழர்களின் சிற்பக்கலைக்குச் சான்றாகும்.
- வெறும் கற்களைக் கொண்டுக் கட்டப்பட்ட, 12 துளைகள் கொண்ட ஜன்னல் இங்குள்ள பொல்லாப்பிள்ளையார் சன்னதியில் இருக்கிறது. இதுவும் சிற்பிகளின் கணிதத் திறமையை எடுத்துரைக்கிறது.
- பத்து தலைகளுடன் இராவணன் இமய மலையைத் தூக்கும் சிற்பம் மிகவும் தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது.
6. நீர்மேலாண்மை
இந்தக் கோவிலில் மொத்தம் 32 தீர்த்தங்கள் உள்ளன. கோவிலின் உள்ளே 17 தீர்த்தங்களும் வெளிப்புறத்தில் பிற தீர்த்தங்களும் உள்ளன. இவையனைத்தும், வருடத்தின் பல்வேறு காலங்களில் நீரை சேமித்து வைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது, தமிழர்களின் சிறந்த நீர் மேலாண்மைக்கு சான்றாகத் திகழ்கின்றது. மேலும், நாற்புறமும் நல்ல படிகளுடனும், நடுவில் நீராழி மண்டபத்துடனும் கட்டப்பட்டப் பொற்றாமரைக் குளம் அழகியலுக்குச் சான்றாகவும் அமைந்துள்ளது.
நெல்லையப்பர் கோவிலில் தமிழகத்தின் வரலாற்றை அறியும் வகையில் கிட்டத்தட்ட 50 கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இவ்வாறு பல அற்புதங்கள் நிறைந்த இக்கோவிலைப் பாதுகாப்பது நமது கடமையாகும்.