திமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் அக்டோபர் 9ஆம் தேதி நடைபெறும் என்று பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
திமுக 15ஆவது உட்கட்சித் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் கிட்டத்தட்ட 90 சதவீதம் முடிந்து விட்ட நிலையில், திமுக அமைப்பு ரீதியான மாவட்ட செயலாளர்கள் யார் என்ற எதிர்பர்ப்பு ஏற்பட்டுள்ளது. திமுக ஆளுங்கட்சியாக உள்ளதால், மாவட்ட செயலாளர்கள் பதவியை பிடிக்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோரைத் தேர்ந்தெடுக்க வரும் அக்டோபர் 9ஆம் தேதி பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோருக்கான தேர்தல் நடைபெறும். அதோடு தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கானத் தேர்தல் தொடர்பாகவும், திமுகவின் 15ஆவது பொதுத் தேர்தலில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களின் கூட்டமும் நடைபெறவிருக்கிறது. கூட்டமானது 9.10.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு சென்னை அமைந்தகரை, பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.