போலிப் பத்திரப்பதிவை ரத்து செய்யும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
போலி பத்திரப்பதிவுகளை ரத்து செய்ய கொண்டு வரப்பட்ட சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் மோசடி மற்றும் முறைகேடாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்யும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
போலி பத்திரப்பதிவால் அமைந்தகரையில் உள்ள நிலத்தை இழந்த பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீக்கு நிலத்தை மீட்டு ஸ்டாலின் வழங்கினார். மேலும் மோசடியாக பதிவு செய்யப்பட்ட 5 ஆவணங்களை ரத்து செய்து உண்மையான சொத்து உரிமையாளர்களுக்கு வழங்கினார்.
மேலும், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை முதல்வர் துவக்கி வைத்தார்.