திராவிட மொழி நூலின் தந்தை எனப் போற்றப்படும் திரு. இராபர்ட்டு கால்டுவெல் அவர்களால் இயற்றப்பட்டதே திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூலாகும். இந்த நூலே பிற்காலத்தில் தமிழ் மொழிக்கு ‘செம்மொழி’ எனும் அங்கீகாரத்தைப் பெற்றுத் தர அடித்தளமிட்டது.
இராபர்ட்டு கால்டுவெல் இந்தியா வந்த 18 ஆம் நூற்றாண்டு, வடமொழியை தேவபாஷை என்றும் தமிழை நீசபாஷை என்றும் அரசியல் ரீதியிலான பிரச்சாரங்கள் முழங்கிய காலகட்டம் ஆகும். தமிழ் மொழி வடமொழியில் இருந்து தோன்றிய மொழியாகும் என்ற கருத்தே அப்பொழுது சொல்லப்பட்டு வந்தது. அந்த நேரத்தில் மொழியியலிலும் அரசியலிலும் தமிழுக்கான முன்னெடுப்பு இந்த நூலின் வாயிலாகவே மறுமலர்ச்சி பெற்றது.
இராபர்ட் கால்டுவெல் ஒப்பியல் மொழி ஆய்வில் பெரிய அளவில் நாட்டம் கொண்டவர் ஆவார். பதினைந்து ஆண்டுகள் தென்னிந்திய மொழிகளை ஒப்பிட்டு ஆய்வு செய்து, அவர் சமர்ப்பித்த பெருவிளக்கமே இந்த நூலாகும். உலக வரலாற்றை மாற்றி அமைக்கும் சக்தி நூல்களுக்கு உண்டு என்பதை ஆணித்தரமாக உணர்த்தியது இந்த நூல்.
அதுவரையில் சமஸ்க்ரிதமே மூத்த மொழி என்று உலகம் நம்பிக்கொண்டிருந்தது. தமிழே உலகின் முதல் மொழி எனும் கண் திறப்பாக இந்த நூல் அமைந்தது.
1856ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட இந்த நூல், தமிழ் மொழியின் குடும்பங்களாக 12 மொழிகளை அடையாளப் படுத்துகிறது. தமிழ் எனும் மொழியே மூத்த மொழி என்றும், அந்த மொழியோடு பிற மொழிச் சொற்கள் கலப்பால் பிறந்தவையே தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளாகும் என்ற கோட்பாடும் விரித்துரைக்கப்பட்டது. தென்னிந்திய மொழிகளில் உள்ள வேர்ச் சொற்களை ஒப்பிட்டு, அவையனைத்தும் ஒத்திருத்தல் கண்டு, தமிழே அந்த மொழிகளுக்கு எல்லாம் தாய் என்று இந்த நூல் முழங்கிற்று. தமிழுக்கும் பிற மொழிகளுக்கும் உள்ள உறவை விளக்கிச் சொன்னதன் மூலம் தென்னிந்திய மொழிக் குடும்பம் என்ற ஒன்றை இந்த நூல் சான்றுகளோடு உறுதிப்படுத்தியது. தமிழ் மொழியின் மூலத்தை ஆராய்ந்ததன் வாயிலாக, திராவிடம் என்பது ஒரு பெரும் நிலப்பரப்பு மட்டுமல்ல; அதுவே ஆதி இனத்தொகுதியின் அடையாளம் என்பதையும் அறிவியல் அடிப்படையில் விளக்கிற்று.
மேலும், வடமொழியின் துணை இல்லமால் தமிழ்மொழி தனித்துவமாக இயங்க முடியும் என்பதை இந்த நூல் ஆவணப்படுத்தியது. மேலும், தமிழ் என்பது வடமொழிக்கும் முந்தைய மொழி என்பதை சான்றுகளோடு நிறுவியது.
அந்நூலின் வழியிலிருந்து ஒரு விளக்கம் இதோ:
'பெருகுகிறது' எனும் சொல் ஆறசை உடையதாய் இருப்பினும் இறுதியில் வரும் 'அது' என்பது அஃறிணை ஒருமை விகுதிஆகும். 'கிறு' என்பது நிகழ்கால இடைநிலை. 'கு' என்பது தன் வினை உணர்த்தும் அஃறிணை சொல்லாகும். எனவே, அவற்றைக் களைந்தால் 'பெரு' என்பதே வினை மூலம் எனப் பெறப்படும். இதிலும் ஒலிச் சுவைக்காக வரும் உகரத்தைக் களைந்தால் 'பெர்' என்பதே வேர்ச் சொல்லாகும். ஆக, திராவிட மொழிக் குடும்பங்களின் வேர்ச் சொற்கள் ஓரசைத் தன்மை உடையவை. இந்த வேர்ச் சொல்லோடு மற்ற சொற்கள் சேரச்சேர பற்பல புதிய சொற்கள் உருவாகும். இந்த விதி திராவிட மொழிக் குடும்பத்தில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும். ஆனால் சமஸ்க்ரிதம் இந்த வகையைச் சேர்ந்தது அல்ல என்று தெளிவாக விளக்குகிறது இந்த நூல். தமிழ் மொழி வடமொழியில் இருந்து தோன்றியது என்ற கருதுகோள், இந்த விளக்கத்தின் நுட்பத்தால் வழக்கொழிந்து போனது.
மேலும் வேர்ச் சொல்லின் அடிப்படையிலேயே தமிழ் மொழிக் குடும்பங்களை அடையாளப் படுத்துகிறது இந்நூல். உதாரணமாக, "ஏழு" என்ற எண் தமிழிலும் மலையாளத்திலும் "ஏழு" என்றே அறியப்படுகிறது. கன்னடத்திலும் துளுவிலும் 'ஏளு' என்று விளங்குகிறது. தெலுங்கில் 'ஏலு' என்பதாய் இருக்கிறது. ஒலியில் மட்டும் சற்று மாற்றம் அடைந்து வருவதால் இந்த மொழிகள் அனைத்தும் ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவையே என்கிறது இந்நூல். மேலும் அவை அனைத்தும் வடமொழியின் இயல்பிலிருந்து மாறுபட்டு, தனித்து தோன்றியவை என்பதை ஆணித்தரமாகப் பதிவு செய்கிறது.
இந்த நூல் தமிழர்களுக்குக் கிடைத்த பொக்கிஷம் ஆகும். இந்த நூலைத் தழுவி, பற்பல ஆராய்ச்சிகள் நிகழ்த்தப் பட்டு, இன்று 34 மொழிகள் திராவிடக் குடும்பத்தின் மொழிகளாக அறியப்படுகின்றன. தமிழே அம்மொழிகளுக்கெல்லாம் தாய் என்பதும் இந்த நூலின் மூலம் உலகுக்கு எடுத்துரைக்கப்பட்டது. ஒவ்வொரு தமிழனாலும் கொண்டாடப் பட வேண்டியது இந்த நூலாகும்.