திருமூலரின் திருமந்திரம்

இன்றைய நாட்களில் இறை வழிபாடு என்பது கோவிலுக்குச் செல்வதோடு நின்று விடுகிறது. ஆனால், உண்மையான இறையை உணர்வது என்பது சித்தர்கள் கூறிய வழியில் சென்று இறைத்தன்மையை அடைவதாகும். சித்தர்கள் அனைவருமே "இறைவன் கோவில் சிலைகளில் இல்லை; அனைவரின் உள்ளத்தில் இருக்கிறான்" என்பதையே எடுத்துரைத்தனர். "நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்!" என்ற தெளிவைப் பெற்று, மற்றவரும் அத்தகைய நிலையை அடைய, பல பாடல்களைச் சித்தர்கள் இயற்றினர். அவ்வாறு, மனிதர்களை இறைநிலை அடையச் செய்யும் வழிகளைக் கூறியதே 'திருமந்திரம்' […]

இன்றைய நாட்களில் இறை வழிபாடு என்பது கோவிலுக்குச் செல்வதோடு நின்று விடுகிறது. ஆனால், உண்மையான இறையை உணர்வது என்பது சித்தர்கள் கூறிய வழியில் சென்று இறைத்தன்மையை அடைவதாகும். சித்தர்கள் அனைவருமே "இறைவன் கோவில் சிலைகளில் இல்லை; அனைவரின் உள்ளத்தில் இருக்கிறான்" என்பதையே எடுத்துரைத்தனர். "நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்!" என்ற தெளிவைப் பெற்று, மற்றவரும் அத்தகைய நிலையை அடைய, பல பாடல்களைச் சித்தர்கள் இயற்றினர். அவ்வாறு, மனிதர்களை இறைநிலை அடையச் செய்யும் வழிகளைக் கூறியதே 'திருமந்திரம்' என்ற நூலாகும்.

மூவாயிரம் பாடல்களால் திருமூலர் எழுதிய “திருமந்திர மாலை” என்ற நூல், உலகத்தவர்களால் முதலில் “தமிழ் மூவாயிரம்” என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் வந்த சான்றோர்கள் திருமந்திரத்தில் நிரம்பியிருந்த மந்திரங்களும் தந்திரங்களும் மனித சரீரத்துக்குத் தேவையான எல்லாவற்றையும் விளக்கியுள்ளபடியால் “திருமூலர் அருளிய திருமந்திரம்” என்ற பெயரில் அழைக்கலாயினர். இந்நூல் மெய்யியல் நூல் வகையைச் சேர்ந்தது.

மனிதர்கள் ஏனைய மனிதர்கள்பால் செலுத்தும் அன்பில்தான் உலகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. உலகத்தில் தோன்றிய கடவுள் சார்புடைய மதங்களும், கடவுள் மறுப்புச் சமயங்களும் கூட அன்பினைப் பெரிதும் போற்றியே உரைக்கின்றன. அத்தகைய சிறப்பு மிக்க ‘அன்பு’தான் திருமூலர் இயற்றிய திருமந்திரத்தின் சாரமாகும். "சிவமே அன்பு; அன்பே சிவம்!" என்பதே திருமந்திரம்.

தவத்தால் ஞானம் பெற்ற சித்தர்கள் பலரும் ‘மவுனம்’ என்ற நிலையில் தங்கி விடுவார்கள். ஆனால் ‘நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்னும் உயர் நோக்கில், தான் பெற்ற ஞானத்தை நமக்கு அளித்து மகிழ்ந்தார் திருமூலர். அனைவரும் அறியக்கூடிய எளிமையும், இனிமையும் உடைய பாடல்களில் ஞானத்தைப் பொதிந்து வைத்தார்.

இறைவனை அறிவதற்கும் அடைவதற்கும் இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அக வழிபாடு, மற்றொன்று புற வழிபாடு. இதில் அக வழிபாடு என்பது தியானம்; அதேபோல புற வழிபாடு பூஜை செய்வது. கடவுள் வெளியே இல்லை உன் உள்ளேயும் இருக்கிறார் என்பது தான் கடவுள் பற்றிய திருமூலரின் ஒற்றை வரி கண்டுபிடிப்பாகும். "உள்ளமே கோயில்; ஊனுடம்பு ஆலயம்!" என்று எளிமையாக விளக்கினார். இதைத் தான் அகம்பிரம்மா என்று வேதம் கூறுகிறது. உள்ளத்தில் அன்பு இல்லாமல், கூடைக் கூடையாய்க் கோயிலுக்கு லட்சார்ச்சனை செய்வதை விட, உள்ளன்போடு உயிர்களை நேசிப்பது சிறந்ததாகும் என்பதே திருமந்திரம் உணர்த்தும் கருத்தாகும்.

"ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சமுதாயத்திற்கு வேண்டிய நல்லிணக்கச் செய்திகளைத் திருமந்திரத்தில் அழகாக விளக்கியவர் திருமூலர். ஆன்மிகம், மருத்துவம், விஞ்ஞானம், தத்துவம், உளவியல் என திருமூலர் தொடாத துறைகளே இல்லை. திருமந்திரம் சைவ சமயத்திற்கு மட்டுமே உரிய ஒரு சமய நூலாக அமையாது, உலக மக்களுக்கெல்லாம் அறத்தையும், ஆன்மிகத்தையும், மருத்துவத்தையும் எடுத்துரைக்கும் பொது நூலாக அமைந்துள்ளது.

திருமந்திரத்தின் மூலம் ஆன்மிகமும் அறிவியலும் வேறன்று, இரண்டும் ஒன்றே என்ற கருத்தியலைப் பதிவு செய்தார் திருமூலர். ஆன்மிகம் என்பது அறிவியல் சார்ந்த ஒரு வாழ்வியல் முறைமை எனப்படும். அந்த வழியில் சென்றால் இறைவனை அடையலாம் என்பதே அவர் உணர்த்தும் கருத்தாகும்.

ஆன்மிகத்தால் தான் உணர்ந்த அறிவியல் கருத்துக்களைப் பாடல்களில் விதைத்தார். அவை இக்கால மருத்துவத்திற்கு முன்னோடியாக அமைகின்றன. உதாரணத்திற்கு, திருமந்திரம் இரண்டாம் தந்திரத்தில் ‘கரு உற்பத்தி’ எனும் தலைப்பில் உள்ள 41 பாடல்களை இன்றைய மகப்பேறு மருத்துவம் போற்றுகிறது. அத்தனைப் பொருட்ச்செறிவோடு மருத்துவம் பயிற்றுவித்திருப்பார் திருமூலர்.

இத்தகையச் சிறப்பு வாய்ந்த திருமந்திரம் ஆன்மிக வட்டத்திலேயே முடங்கிக் கிடக்கிறது. இந்த நூலின் பயனை அனைவரும் அடைய வேண்டி, பலர் உரையெழுதியும், சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் வருகிறார்கள். நாமும் திருமந்திரம் காட்டும் வழிப்படி நடந்து நன்மைகள் பெறுவோம்.

1
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu