ஒரு சமூகத்தின் வரலாற்றைத் தெரிந்துகொள்வதற்கு, அந்தச் சமூகத்தின் வழிபாட்டு முறைகள், உணவுப் பழக்கங்கள், உடை, இலக்கியங்கள் எனப் பலவற்றை ஆராய்ந்து தெரிந்துகொள்ளலாம். அவற்றுள், அந்தச் சமூக மக்கள் பயன்படுத்தும் புழங்கு பொருட்களைக் கொண்டு, அவற்றுக்கும் அந்தச் சமூகத்துக்கும் இடையே உள்ள உறவை, பண்பாட்டை ஆராய்வதை ‘பொருள்சார் பண்பாடு’ என்கின்றனர் ஆய்வாளர்கள். இவ்வாறான ஆய்வில் தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றியதாகக் கருதப்படுவனவற்றுள் பனைமரம் முதன்மையானதாகும். பல்லாயிரம் வருடங்களாக பனைமரத்தில் இருந்து பெறப்படும் பொருட்களைத் தான் தமிழர்கள் பெரிதும் உபயோகித்து வருகின்றனர்.
பனை மரம் தமிழ் இலக்கியத்தில் ஈகையின் உவமையாகவே சொல்லப்படுகிறது. “உத்தமர்தாம் ஈயுமிடத்து ஓங்குபனை போல்வரே” என்ற கூற்றும், "தினை அனைத்தே ஆயினும் செய்த நன்றுண்டால் பனை அனைத்தா உள்ளுவர் சான்றோர்" என்ற கூற்றும் பனை எவ்வளவு நன்மை பயக்கும் மரமாக இருந்து வந்திருக்கிறது என்பதற்கு சான்றுகளாகும்.
பனை மரத்தில் 801 பயன்பாட்டு பொருட்கள் இருப்பதாக 'தாலவிலாசம்' என்ற நுால் கூறுகிறது. ஆண், பெண் என்று வகைப்படுத்தப்பட்டிருக்கும் பனையில், வேர், தூர்ப் பகுதி, நடு மரம், பத்தை மட்டை, உச்சிப் பகுதி, ஓலை, சில்லாட்டை, பாளை – பீலி, பனங்காய் (பெண் பனையில் மட்டும் காணப்படும்), பச்சை மட்டை, சாரை ஓலை, குருத்தோலை என 12 உறுப்புகள் உள்ளன. இந்த உறுப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பயனைத் தரக் கூடியது. அந்த உறுப்புகளை மனிதர்கள் எவ்வாறெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதைத் தன் “பனை மரமே! பனை மரமே!” என்ற புத்தகத்தில் விரிவாகப் பதிவுசெய்திருக்கிறார் திரு. ஆ.சிவசுப்பிரமணியன்.
மிக நீளமான உறுதியான சல்லி வேர் தொகுப்பை பனை மரம் பெற்றிருப்பதால், மண் அரிப்பைத் தடுக்கும் இயற்கையான அரணாக நம் முன்னோர் பனையைப் பயன்படுத்தினர். வயல் வரப்புகளிலும் குளம், கால்வாய்கள், ஆற்றுப்படுகைகளிலும் கடலை ஒட்டிய பகுதிகளிலும் வளர்த்தனர். இடத்தின் எல்லைகளைக் குறிக்கவும் வயல்களிலும் தோட்டங்களிலும் நட்டனர். கரும் பாறையைப் போன்ற உறுதியான பனையின் தண்டுப்பகுதி குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் பனங்கையாகவும், பனம் வரிச்சலாகவும், வாய்க்கால்களைக் கடக்க உதவும் மரப்பாலமாகவும் பயன்படுகிறது. பனை ஓலையைத் தாங்கி நிற்கக் கூடிய மட்டை, வீடுகளைச் சுற்றி வேலி அமைக்கவும், தடுப்புத்தட்டிகள் பின்னுவதற்கும், கயிறு திரிக்கவும் பயன்படுகிறது. ஓலை, கூடைகள் முடையவும் கைவினைப் பொருட்கள் செய்யவும் கூரை வேயவும் பயன்படுகிறது. நுங்கும் பனங்கிழங்கும் உணவாகப் பயன்படுகின்றன. பனஞ்சாறு பதநீராகவும் கற்கண்டாகவும் கருப்பட்டியாகவும் தமிழர் உணவுப் பழக்கத்தில் ஆரோக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது.
கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமக் கணக்கின்படி ஒரு பனை மரமானது ஓராண்டில் 150 லிட்டர் பதநீர், 1 கிலோ தும்பு, 1.5 கிலோ ஈர்க்கு, 8 ஓலைகள், 16 நார் முடிகள் ஆகியவற்றை நல்கும் வளவாய்ப்புடையது. மேலும் ஒரு பனை மரத்திலிருந்து 24 கிலோ பனை வெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவற்றைப் பெறமுடியும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது. இந்தக் காரணங்களாலேயே பனைக்கு ‘கற்பக விருட்சம்’ என்று நமது முன்னோர்கள் பெயரிட்டுள்ளனர். இன்றும் கூட தமிழகத்தின் மாநில மரம் பனையே. மேலும், பனை மரம் ஒரு பல்லுயிர்க் கழகம். பனை உழவாரண், பனங்காடை போன்ற பறவைகள் பனை மரத்தை நம்பியே உயிர் வாழ்கின்றன.
பனை தொடர்பான கலாச்சாரக் கூறுகள், பனை சார்ந்த சொற்கள் போன்றவற்றைப் பார்க்கும்போது, நம் கலாச்சாரத்துக்கும் மொழிக்கும் பனை எந்த அளவுக்கு பங்களிப்பு செய்திருக்கிறது என்பது புலனாகிறது. ஆனால் பல நூற்றாண்டுகளாகத் தமிழகத்தின் அடையாளமாக இருந்த பனையின் மரபை மறக்கடிக்கும் வகையிலான வாழ்வியல் முறைக்கு நாம் கடந்த அரை நூற்றாண்டுக் காலத்திற்குள் மாறத் தொடங்கிவிட்டோம். அந்த மாற்றம் நமக்குக் குறுகிய காலப் பயன்களையும் நீண்டகாலத் தீமைகளையும் செய்துகொண்டிருக்கின்றன. அதுமட்டுமன்றி, பனை என்ற ஒரு தாவர வகையையே அழிவின் விளிம்பிற்குத் தள்ளிவிட்ட அபாயத்தையும் அந்த மாற்றம் ஏற்படுத்திவிட்டது. பனை மரங்களைக் காப்பாற்றி, பனையின் மூலம் மண்ணையும் மனிதர்களையும் மீட்டெடுக்கும் பெரும்பொறுப்பு இப்போது நமது கையில் உள்ளது.