இந்தோனேசியாவின் மலாங் நகரில் உள்ள கன்ஜுருஹன் மைதானத்தில், நேற்று முன்தினம், இந்தோனேசிய கால்பந்துக் கூட்டமைப்பு (பிஎஸ்எஸ்ஐ) சார்பில் நடத்தப்படும் ‘லிகா 1’ கால்பந்துப் போட்டி நடைபெற்றது. அதில், அரேமா அணி மற்றும் பெர்சிபயா சுரபயா அணிக்கு இடையே போட்டி நடைபெற்றது. இதில், அரேமா அணி உள்ளூர் அணியாகும். பெர்சிபயா அணி, கிழக்கு ஜாவா தலைநகர் சுரபயாவைச் சேர்ந்ததாகும். ஆனால், இந்தப் போட்டியில், எதிர்பாராத விதமாக அரேமா அணி, சொந்த மண்ணில் தோல்வியைத் தழுவியது. இது அரேமா அணி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
ஆத்திரத்தில், அரேமா அணியின் ரசிகர்கள் மைதானத்தில் குவிந்து, வன்முறையில் ஈடுபடத் துவங்கினர். பெர்சிபயா சுரபயா அணியின் வீரர்களைத் தாக்க அவர்கள் முனைந்தனர். துரிதமாகச் செயல்பட்ட காவல் துறையினர், வீரர்களை பாதுகாப்பான இடத்திற்கு பத்திரமாக அழைத்துச் சென்றனர். இதனால், வீரர்களின் உயிர் பாதுகாக்கப்பட்டது. எனினும், காவல் துறையினரின் கட்டுப்பாட்டை மீறி, தீவிர வன்முறையில் ரசிகர்கள் ஈடுபட்டனர். இதனால், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் காவல் துறையினர் வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 187 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அத்துடன், பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ஏற்கனவே, கன்ஜுருஹன் மைதான கால்பந்துப் போட்டிகளில், பலமுறை வன்முறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 38,000 இருக்கைகள் கொண்ட மைதானத்தில் 42,000 டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன. மேலும், உள்ளூர் அணியான அரேமா ரசிகர்களுக்கே பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன. எனவே, அணியின் தோல்வியால் இந்த வன்முறை ஏற்பட்டுள்ளது. இது குறித்த உயர்நிலை விசாரணைக்கு இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ உத்தரவிட்டுள்ளார். மேலும், `லிகா 1' கால்பந்து தொடர் போட்டி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். அத்துடன், நாட்டில் நடைபெற்ற கடைசி கால்பந்து கலவரமாக இது இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.
இந்த துயர சம்பவம் உலகெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல நாட்டு தலைவர்களும் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். ஃபிஃபா அமைப்பின் தலைவர் கியானி இன்ஃபான்டினோ, “இது கால்பந்து வரலாற்றில் ஒரு கருப்பு தினம். ஒட்டுமொத்த கால்பந்து உலகமும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறக்கூடாது’’ என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கூட நெரிசல் மட்டுமல்லாது, மூச்சு திணறல் காரணமாக பெரும்பாலானோர் இறந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அளவுக்கு அதிகமாக கண்ணீர் புகை குண்டுகளை சுவாசித்தால், உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, கால்பந்து விளையாட்டுப் போட்டிகளின் போது, கலவரம் ஏற்பட்டால், கண்ணீர் புகை குண்டுகளை வீசக் கூடாது என்று ஃபிஃபா அறிவுறுத்தி உள்ளது. ஆனால், அதனைப் பொருட்படுத்தாது, காவல்துறையினர் செயல்பட்டதாலேயே இந்த கொடூர சம்பவம் நேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, காவல்துறை தரப்பில் இருந்து, “வன்முறை கட்டுக்கடங்காமல் சென்றது. எங்கள் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இரண்டு போலீசார் கொல்லப்பட்டனர். நிலைமை மேலும் மோசமடையாமல் தடுக்கவே, கண்ணீர் புகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.