செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் புகைப்படங்களை உருவாக்கும் போக்கு அதிகரித்து காணப்படுகிறது. மேலும், சமூக வலைதளங்களில் பகிரப்படும் பெரும்பாலான புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டதாக அறியப்படுகிறது. இது போன்ற டீப் பேக் புகைப்படங்கள் சர்ச்சைக்கு வழி வகுக்கிறது. எனவே, செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்களை தனியாக அடையாளப்படுத்தும் முன்னெடுப்பை மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டது என்பதைக் குறிக்கும் அடையாளம் காண்பிக்கப்படும்.
மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஓபன் ஏ ஐ, மைக்ரோசாப்ட், கூகுள், அடோப், மிட் ஜெர்னி, ஷட்டர்ஸ்டாக் போன்ற நிறுவனங்களின் செயற்கை நுண்ணறிவு கருவி மூலம் உருவாக்கப்படும் புகைப்படங்கள் பகிரப்பட்டால், அவை அடையாளப்படுத்தப்படும். இது தவிர, வேறு தளங்களில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்படும் செயற்கை நுண்ணறிவு புகைப்படங்களையும் அடையாளம் காணும் டூல்கிட் உருவாக்கத்தில் பணியாற்றி வருவதாக மெட்டா தெரிவித்துள்ளது.