நாசாவின் துணையோடு இண்டியூட்டிவ் மெஷின்ஸ் என்ற அமெரிக்க தனியார் நிறுவனம், நிலவுக்கு விண்கலத்தை அனுப்பி உள்ளது. ஒடிசியஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலம், கடந்த 22 ஆம் தேதி நிலவின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவில் தரையிறங்கும் முதல் அமெரிக்க விண்கலமாக இது வரலாறு படைத்தது. எனினும், தற்போது, இந்த திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஒடிசியஸ் விண்கலம், தரையிறங்கும் சமயத்தில் சரிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இண்டியூட்டிவ் மெஷின்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் அல்டிமஸ், “எதிர்பாராத விதமாக, ஒடிசியஸ் லேண்டர் தரையிறங்கும் சமயத்தில் சரிந்து விழுந்தது. இதனால் திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆனாலும், விண்கலத்தின் பல்வேறு அறிவியல் பாகங்கள் செயல்பாட்டுடன் உள்ளன. எனவே, இந்த விண்கலத்தின் மூலம் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படும். இது சிறிய பின்னடைவே அன்றி தோல்வி அல்ல” என்று கூறியுள்ளார்.