இந்தியாவை உலகின் 2வது பெரிய பொருளாதார நாடாக மாற்றுவதற்கு நிதி ஒழுங்குமுறைகளை கடைப்பிடிப்பது அவசியமாகும் என்று வட கிழக்கு மாநில முதல்வர்களுக்கு அமித்ஷா அறிவுரை வழங்கினார்.
அசாம் மாநிலம், கவுகாத்தியில் 70வது வட கிழக்கு கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. இதில், வடகிழக்கு மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், கடந்த 70 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் வடகிழக்கு பகுதிகளை வன்முறை மற்றும் அராஜகத்தை நோக்கி தள்ளியது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின்போது அந்த மாநிலங்களில் வளர்ச்சி இல்லை. கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் வடகிழக்குப் பகுதிகள் வளர்ச்சி அடைந்து வருகின்றன.
வடகிழக்குப் பகுதிகளின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி, பட்ஜெட்டில் அதிக நிதியை ஒதுக்கி அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி உள்ளார். வட கிழக்கில் உள்ள மாநில அரசுகள், நிதி ஒழுங்குமுறைகளை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்தியாவை உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக மாற்றுவதற்கு இது முக்கியமானது என்று அவர் கூறினார்.