மாதுளை, சுமார் 8000 ஆண்டுகள் பழைமையான வரலாறு கொண்ட, உலகின் தொன்மையானத் தாவரங்களுள் ஒன்று. லித்ரேசியே என்ற தாவரக் குடும்பத்தைச் சார்ந்த மாதுளையின் தாவரவியல் பெயர் புனிகா கிரானாடம் என்பதாகும். களர், உவர், அமிலத்தன்மை கொண்ட மண் உட்பட எல்லா மண்வகைகளிலும் செழித்து வளரும் தனிச் சிறப்பு இதற்குண்டு. தாவரவியலாளர்களின் கருத்துபடி மாதுளையின் பூர்வீகம் பாரசீகம். அங்கிருந்து சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வட இந்தியப் பகுதிக்கு இந்தப் பழம் அறிமுகமாகிவிட்டது. இதற்குச் சான்றாக, ஹரப்பாவின் அகழ்வாராய்ச்சிகளின்படி கி.மு. 2000 காலத்தில் அங்கே மாதுளை விளைந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. கி.மு.8ம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஆயுர்வேதத்தின் தந்தையான சரகர், இரண்டு வகை மாதுளைகளைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். பிற்காலங்களில் உலகின் பல பகுதிகளையும் மாதுளை சென்றடைந்தது. ‘இனிக்கும் இந்த பழங்கள் எங்கெங்கும் விளைகின்றன’ என்று கி.பி 7-ம் நூற்றாண்டில் யுவான் சுவாங் தன் பயணக்குறிப்பில் மாதுளை குறித்து எழுதியிருக்கிறார். எனவே, உலகில் பயிரிடப்பட்ட ஆதி கனிகளுள் மாதுளையும் ஒன்று என்பது உறுதியாகிறது.
மாதுளை அதனுடைய தனிப்பட்ட சுவை, ஊட்டச்சத்துகள், வளரியல்பு ஆகியவற்றின் காரணமாக “தெய்வீகப் பழம்” என்று அழைக்கப்படுகிறது. யூதம், கிறீத்தவம், இஸ்லாம், பௌத்தம், இந்து மதம் போன்ற அனைத்திலும் மாதுளை முக்கியப் பழமாகக் காணப்பெறுகிறது. சீன மற்றும் கிரேக்க நாகரிகங்களில் மாதுளை அதிர்ஷ்டப்பழமாகக் கருதப்படுவதோடு அவர்களின் பலவகைச் சடங்குகளிலும் இடம்பெறுகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக, கி.மு 6000 காலத்தைச் சேர்ந்த மாதுளையின் படிமங்கள், கிரேக்கப் பகுதிகளில் கிடைத்திருக்கின்றன. எகிப்தியர்கள் இப்பழம் நித்தியத்தைக் கொடுப்பதாக நம்பி, இறந்த உடல்களுடன் இதனைப் புதைத்து வைக்கும் மரபு கொண்டிருக்கின்றனர். இதற்குச் சான்றாக, எகிப்திய மன்னர்களின் பிரமிடுகளில் மாதுளை கண்டறியப்பட்டுள்ளது. மாதுளம்பழம் சொர்க்கத்தின் தோட்டத்தில் இருந்து வந்ததாகக் குரானில் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.மு 5-ம் நூற்றாண்டில் புத்தர், பிந்துசாரர் ராஜ்ஜியத்தில் தங்கியிருந்தபோது, மாதுளை உண்டதாகக் கதைகள் உண்டு. மேலும், இந்து மதத்திலும் மாதுளை புனிதமாகக் கருதப்படுகிறது. கி.பி 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரி நாதர் பார்வதி தேவி விநாயகருக்கு மாதுளைக்கனியைக் கொடுத்ததாகத் திருப்புகழில் பாடுகிறார். 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த அபிராமி பட்டர் மாதுளையைக் கடவுளைக் குறிக்குமாறு ‘மாதுளம்போது’ என்றும் ‘மாதுளம்பூ நிறத்தாளை’ என்றும் அபிராமி அந்தாதியில் கூறுகிறார். பெரியாழ்வாரும் “ஒண்மாதுளம்பூ இடைவிரவிக் கோத்த” என்ற பாடல் வரிகளின் மூலம் மாதுளம்பூவைக் கண்ணனின் அரைஞாண் கயிற்றில் கோத்திருந்ததாகச் சொல்கிறார்.
இவ்வாறு மாதுளையைத் தெய்வீகமானப் பழம் என்று கருதியதற்கு இதன் மருத்துவப் பயன்களே காரணமாகின்றன. மாதுளையின் பழம், பூ, பட்டை, பிஞ்சு ஆகிய அனைத்தும் மருத்துவக் குணங்கள் நிறைந்தவை. இதைப் பல ஆண்டுகளுக்கு முன்னரே மனிதர்கள் நன்கு உணர்ந்திருந்தனர். அகத்தியர் குணபாடத்தில் மாதுளையின் பல்வேறு பயன்களைக் குறிப்பதாக
“சங்கையறச் சொற்றவிர்க்கும் சந்நியாசம் சத்தி
அங்கை அதிதாக மனம் சேருமோ _கங்கை
இருந்தாழ மக்கட் கிரத்தலைச் செய்நோய் போம்
இருந்தாழ மக்களிகட் எண்.”
என்ற பாடல் வரிகள் இருக்கின்றன. மேலும், எகிப்தியர்கள் மாதுளைச் சாற்றை வயிற்றுவலிக்கான மருந்தாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது ஆதாரங்களின் மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது. புத்தரின் தாயார் மாதுளையை உண்டு, ஆரோக்கியம் பெற்று, பின்னர் புத்தரைக் கருத்தரித்தார் என்று புத்த மதக் கதைகள் கூறுகின்றன. இவையே மாதுளையின் மகத்துவத்தைப் பல ஆண்டுகளுக்கு முன்னரே உலகினர் அனைவரும் அறிந்ததற்கான அடையாளமாக இருக்கிறது.
ஆயுர்வேதத்திலும் சித்த வைத்தியத்திலும் மாதுளையின் மலர் மிக முக்கியமான மருந்தாகக் கருதப்படுகிறது. தலைவலி, உடல் சூடு, இருமல், பெண்களுக்கானப் பிரச்னைகள் என்று பல நோய்களைத் தீர்க்க மாதுளம்பூ மருந்தாகப் பயன்பட்டதால், “பூதலத்தில் மாதுளையின் பூ” என்று இப்பூவை “அகத்தியர் குணபாடம்” சிறப்பிக்கின்றது. மாதுளம் பழத்திற்கும் மற்ற பழங்களுக்கும் உள்ள வேறுபாடு இதன் இனிப்புச் சுவையோடு கலந்திருக்கும் துவர்ப்புச் சுவையாகும். சித்த மருத்துவம், ‘ஆறு சுவைகளில் துவர்ப்புச் சுவையானது உடலை உரமாக்கக்கூடியது’ என்று குறிப்பிடுகிறது. எனவே, இது பாரம்பரிய மருத்துவத்தில் முக்கிய இடம் வகிக்கிறது.
மாதுளங்க ரசம் அல்லது மாதுளை மணப்பாகு என்ற பெயரில் மாதுளைச்சாறு பல காலமாகவே மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரத்தத்தைச் சுத்திகரிக்கவும், புதிய ரத்தம் ஊறவும், வயிற்றுப்புண்ணை ஆற்றவும், ரத்தத்தில் வெள்ளை அணுக்களை அதிகரிக்கவும், ரத்தசோகையைப் போக்கவும் இது உதவுகிறது. மேலும், கருப்பையை வலுவாக்கும் என்பது அதன் சிறப்புக் குணமாகப் பார்க்கப்படுகிறது.
நவீன அறிவியல், இப்பழத்தில் தாதுஉப்புக்களான மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம், செலீனியம், துத்தநாகம், செம்புச்சத்து, பொட்டாசியம் ஆகியவை உள்ளதாகக் கூறுகிறது. மேலும், விட்டமின் சி,இ,கே, பி1, பி2, பி3, பி5, பி6 போன்றவை காணப்படுகின்றன என்றும் கூறுகிறது. இதன் சிறப்பை உணர்ந்ததாலேயே, மாதுளம்பழம் பல ஆண்டுகளாக மக்களின் அன்றாட வாழ்வியலோடு ஒன்றிணைந்த உணவாகிவிட்டது.
சங்ககாலத்தில் தமிழர்கள் விரும்பி உண்ட கனிகளில் மாதுளையும் ஒன்று. தாடிமம், பீசபுரம், மாதுளங்கம், மாதுளம், கழுமுள், மாதளை, கொடிமாதுளை என்று பல பெயர்களில் தமிழ் இலக்கியத்தில் மாதுளை குறிக்கப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் கொலைக்களக்காதையில், கோவலனும் கண்ணகியும் மாதவி வீட்டிற்கு அடைக்கலமாகச் சென்ற போது, மாதவி கண்ணகியிடம் முதிர்ந்த பலாக்காய், வளைந்த வெள்ளரி, மாம்பழம், வாழைப்பழம், செந்நெல் அரிசி, பால், நெய்யுடன் மாதுளையின் இளங்காயையும் சமைப்பதற்குத் தந்ததாக இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.
“கோளிப் பாகல் கொழுங்கனித் திரள்காய்
வாள்வரிக் கொடுங்காய் மாதுளம் பசுங்காய்
மாவின் கனியொடு வாழைத் தீங்கனி
சாலி யரிசி தம்பால் பயனொடு”
என்ற வரிகள் அதனை விளக்குகின்றன. ஆக, பண்டைக் காலத்திலிருந்தே தமிழர்களின் வாழ்வோடு மாதுளை இரண்டறக் கலந்துவிட்டது என்று உறுதியாகிறது. தமிழர்கள் பழங்காலத்தில் மாதுளம்பிஞ்சைப் பிளந்து, மிளகுப் பொடி, கறிவேப்பிலை கலந்து பசு நெய்யிலே வேகவைத்துச் சாப்பிட்டிருக்கிறார்கள் என்பதை
'சேதாநறுமோர் வெண்ணெயின் மாதுளத்து
உருப்புறு பசுங்காய்ப் போழொடு கறிகலந்து'
என்ற பெரும்பாணாற்றுப்படைப் பாடல் வரிகள் தெரிவிக்கின்றன. மேலும், தமிழர்கள் மாதுளையைச் சிவப்பு சாயம் தயாரிக்கவும் உபயோகப்படுத்தி இருக்கிறார்கள் என்பது பழங்கால ஓவியங்களின் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
இவற்றின் மூலம், உலகின் பல நாகரீகங்களும் தமது உணவு, உளவியல், சமயம் மற்றும் அலங்காரங்களுக்கு மாதுளம் பழத்தை முதன்மையாக உபயோகித்தது தெரியவருகின்றது. இன்றும் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் மாதுளை மதிக்கப்படுகிறது. குறிப்பாக, அசர்பைஜான் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் “மாதுளைத் திருவிழா” என்ற பெயரில் பெரும் விழா கொண்டாடப் படுகிறது. மாதுளையின் சிறப்பை உணர்ந்து, நாமும் உணவாக, மருந்தாக, மாதுளையைக் கொண்டாடுவோம்.