இஸ்ரோ தலைவர் சோம்நாத் இந்தியாவின் அடுத்த நிலவு திட்டம் குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார். சந்திரயான் 4 திட்டத்தில், நிலவிலிருந்து மாதிரிகளை சேகரித்து கொண்டு வருவது குறித்து விவாதங்கள் நடைபெற்று வருவதாக கூறியுள்ளார். அத்துடன், மற்ற நாடுகளை பின்பற்றாமல், இந்தியா புதிதாக வேறு பல முயற்சிகளை சந்திரயான் 4 திட்டத்தில் மேற்கொள்ளவும் கலந்துரையாடல் நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
சந்திரயான் 4 திட்டம் 2 கட்டங்களை கொண்டிருக்கும். சந்திரயான் 3 போல அல்லாமல், இது மீண்டும் பூமிக்கு திரும்பக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட வேண்டும். அடுத்ததாக, இது, பூமி அல்லது நிலவு ஏதேனும் ஒன்றின் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட வேண்டியது அவசியம். அத்துடன், ரோபோடிக் திறன் மூலம் நிலவிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொண்டு வரப்பட வேண்டும். இதற்கு அதிநவீன வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். இதனால், சந்திரயான் 4 திட்டம் பல்வேறு சவால்களை கொண்டுள்ளது. - இவ்வாறு அவர் கூறியுள்ளார்.