நிலவில் சந்திராயன் 3 இன் விக்ரம் லேண்டர் தடம் பதித்த பகுதிக்கு சிவசக்தி என்று பிரதமர் மோடி பெயர் சூட்டினார்.
இஸ்ரோ சார்பில் நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திராயன்-3 விண்கலம் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இது சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு ஆகஸ்ட் 23ஆம் தேதி திட்டமிட்ட இடத்தை சென்றடைந்தது. இதில் இருந்து பிரிந்து சென்ற லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்தது. மேலும் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக வெளியே வந்து ஆய்வில் ஈடுபட்டது. இதன் மூலம் நிலவில் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்று பெருமையை இந்தியா அடைந்தது. பின்னர் பிரதமர் மோடி இஸ்ரோ மையத்திற்கு சென்று விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் சந்திராயன் 3 நிலவில் கால் பதித்த ஆகஸ்ட் 23ஆம் தேதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் எனவும் அறிவித்தார். அதே போல் விக்ரம் லேண்டர் தடம் பதித்த பகுதிக்கு சிவ சக்தி என்ற பெயர் சூட்டினார். தற்போது இந்த சிவசக்தி பெயருக்கு சர்வதேச விண்வெளி யூனியனின் கிரக அமைப்புகளுக்கான பெயரிடும் பணிக்குழு அங்கீகாரம் அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே இனி அந்த இடம் சிவ சக்தி என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் அடையாளப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது. இது இந்தியாவிற்கு மிகப்பெரிய அங்கீகாரம் என்றும் கருதப்படுகிறது.