உலக அளவில் வெப்பநிலை உயர்வு தொடர்ந்து அதிகமாக பதிவாகி வருகிறது. இந்த நிலையில், இமாலய பகுதிகளில் அதிகமான வெப்பம் பதிவாகி வருவதால், அங்குள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. இதனால் இமாலய ஏரிகளின் அளவு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. கிட்டத்தட்ட 89% அளவுக்கு அபாயகரமான விகிதத்தில் இமயமலை ஏரிகள் வளர்ந்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
கடந்த 1984 முதல் 2023 ம் ஆண்டு வரையில் இமயமலை பகுதிகளின் செயற்கைக்கோள் படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. செயற்கைக்கோள் புகைப்படங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, மொத்தம் உள்ள 2431 ஏரிகளில், கிட்டத்தட்ட 676 பனிப்பாறை ஏரிகள் விரிவடைந்துள்ளன. அதன்படி, கடந்த 38 ஆண்டுகளில் இரு மடங்கு வேகத்தில் பனிப்பாறைகள் உருகுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏரிகள் வேகமாக விரிவடைந்து வருவதால், திடீர் வெள்ளம் போன்ற பேரிடர் அபாயங்கள் உயர்ந்துள்ளதாக இஸ்ரோ எச்சரித்துள்ளது.