கடந்த ஆண்டு உலகம் முழுவதும் சுமார் 28 கோடி பேர் கடுமையான பட்டினியால் வாடினர் என்று ஐநா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐ.நா உணவு பாதுகாப்பு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்படுவதாவது, 2023 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் சுமார் 28.20 கோடி மக்கள் கடுமையான பட்டினியால் பாதிக்கப்பட்டனர். அதிலும் போர் சூழலில் உள்ள காசா மற்றும் சூடானில் இந்த பாதிப்பு கடுமையாக இருந்தது. அதோடு வானிலை மற்றும் பொருளாதார பாதிப்புகள் போன்றவற்றால் கடும் உணவு பாதுகாப்பின்மை ஏற்பட்டது. தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக பட்டினியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2022-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டில் 2.40 கோடி மக்கள் அதிகரித்துள்ளனர்.
காங்கோ குடியரசு, நைஜீரியா, ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா, சிரியா, யோமன் ஆகிய நாடுகளில் தொடர்ந்து உணவு நெருக்கடி உள்ளது. எல்நினோ வானிலை நிகழ்வு தென்னாப்பிரிக்காவில் கடுமையான வறட்சிக்கு வழி வகுத்துள்ளது. ஐ.நா அளித்துள்ள இந்த அறிக்கையில் எந்தெந்த நாடுகளில் எத்தனை சதவீதம் மக்கள் எந்த காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெளிவாக கூறியிருக்கிறது.