தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்

June 21, 2022

தலையாட்டி பொம்மைகள் முதன் முதலில் 19ஆம் நூற்றாண்டில், சரபோஜி மன்னரின் காலத்தில், தஞ்சையில் உருவாக்கப்பட்டன. காவிரி ஆற்றின் களிமண்ணால் செய்யப்படும் இப்பொம்மைகள் தஞ்சையின் கலை மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றுகின்றன. தலையாட்டி பொம்மைகள் அடிப்பகுதியில் பெரியதாகவும் எடைமிகுந்ததாகவும், மேற்புறம் குறுகலாகவும் எடை குறைவானதாகவும் உருவாக்கப்படுகின்றன. இதனால் இப்பொம்மைகளைச் சாய்த்துக் கீழே தள்ளினாலும், புவிஈர்ப்பு விசையின் செயல்பாட்டிற்கேற்ப கீழே விழாமல் மீண்டும் செங்குத்தாகவே நிற்கும். ராஜா ராணி பொம்மைகள், தாத்தா பாட்டி பொம்மைகள், நடன மங்கை பொம்மைகள் என மூன்று […]

தலையாட்டி பொம்மைகள் முதன் முதலில் 19ஆம் நூற்றாண்டில், சரபோஜி மன்னரின் காலத்தில், தஞ்சையில் உருவாக்கப்பட்டன. காவிரி ஆற்றின் களிமண்ணால் செய்யப்படும் இப்பொம்மைகள் தஞ்சையின் கலை மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றுகின்றன.

தலையாட்டி பொம்மைகள் அடிப்பகுதியில் பெரியதாகவும் எடைமிகுந்ததாகவும், மேற்புறம் குறுகலாகவும் எடை குறைவானதாகவும் உருவாக்கப்படுகின்றன. இதனால் இப்பொம்மைகளைச் சாய்த்துக் கீழே தள்ளினாலும், புவிஈர்ப்பு விசையின் செயல்பாட்டிற்கேற்ப கீழே விழாமல் மீண்டும் செங்குத்தாகவே நிற்கும்.

ராஜா ராணி பொம்மைகள், தாத்தா பாட்டி பொம்மைகள், நடன மங்கை பொம்மைகள் என மூன்று வகையாகத் தஞ்சாவூர் பொம்மைகள் உருவாக்கப்படுகின்றன. ராஜா ராணி பொம்மைகள் கூம்பு வடிவில் வளைவான அடிப்பாகம் கொண்டு செய்யப்படுகின்றன. முழு உருவமும் ஆடும் வகையில் அமைந்த இதுவே முதன் முதலில் உருவாக்கப்பட்ட வடிவமாகும். பின்னர் தாத்தா பாட்டி பொம்மைகள் உருவாக்கப்பட்டன. அவற்றில் நிலையாக அமர்ந்திருக்கும் வகையிலான தாத்தா பாட்டி உருவத்தில் தலை மட்டும் ஆடும் வகையில் இருக்கும். தலை மட்டும் ஆடும் வித்தை கண்டறிந்த பின்னர் நடன மங்கை பொம்மைகள் வடிவமைக்கப்பட்டன. இந்த பொம்மைகளில், தலை, மேலுடல், கீழுடல், கால்கள் என்று நான்கு பாகங்கள் உள்ளன. கால்கள் மட்டும் நிலையாக இருந்து, மற்ற பாகங்கள் அனைத்தும் ஆடும் வகையில் இந்தப் பொம்மைகள் அமைக்கப்பட்டுள்ளன.

உலகில் கருவிகளின் உதவியின்றி உருவாக்கப்படும் பொம்மைகளில் தஞ்சாவூர் பொம்மைகள் உயர்ந்தவையாகக் கருதப்படுகின்றன. ஏனெனில் ஆடும் வகையிலான, பழமையான பொம்மை வகை உலகின் வேறேந்தப் பகுதியிலும் இல்லை. மின்சக்தியின் உதவியோடு ஆடும் பிளாஸ்டிக் பொம்மைகள் இப்போது ஏராளமாய் உள்ளன. ஆனால் களிமண்ணால் செய்யப்பட்டு, சாதாரணமாகவே ஆடும் வகையில் அமைந்த பொம்மை இது ஒன்றே ஆகும்.

ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் துன்பங்களால் கீழே விழுந்தாலும், தன்னம்பிக்கை இருந்தால் மீண்டும் எழுந்து விட முடியும் என்பதை இந்தத் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் உணர்த்துகின்றன. மேலும், வார்த்தைகளில் சொல்ல முடியாதவைகளைக் கூட தலையசைப்பால் உணர்த்தி விட முடியும் என்பதையும் இந்தப் பொம்மைகள் எடுத்துக் கூறுகின்றன.

தலையாட்டி பொம்மைகள் தஞ்சையின் உரிமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, 2008ஆம் ஆண்டு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொம்மைகளின் வரவால் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளின் உற்பத்தியும் விற்பனையும் குறைந்துவிட்டது. எனினும் இப்பொம்மைகளின் அழகும் கலை நயமும் வேறெதிலும் இல்லை என்பதால் இவை வெளிநாட்டவரால் விரும்பி வாங்கப்படும் பொருளாக உள்ளது. சரிவைச் சந்தித்தாலும், இவைக் கூறும் தத்துவத்தைப் போல இப்பொம்மைகளின் நிலை கீழே விழாமல் எழுந்து நின்று ஏற்றம் காணும் என்று நம்புவோம்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu