இலங்கையில் அதிபர் தேர்தல் வரும் செப்டம்பர் மாதம் 17 இல் இருந்து அக்டோபர் 16க்குள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்நாட்டு தேர்தல் ஆணையம் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்படுவதாவது, இலங்கையின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதியிலிருந்து அக்டோபர் மாதம் 16ஆம் தேதிக்குள் நடைபெறும். இந்த காலகட்டத்தில் அரசியல் சாசன விதிமுறைகளின்படி அதிபர் தேர்தல் வேட்பு மனுக்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் தேதி இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். மஹிந்த ராஜபக்சே பிரதமர் ஆனார்.
இருந்தபோதிலும் அப்பொழுது இருந்த பொருளாதார சூழலில் நாடு முழுவதும் போராட்டங்கள் ஏற்பட்டு கடந்த 2022 மே மாதம் மஹிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக ரணில் விக்ரமசிங்கவை புதிய பிரதமராக கோத்தபய ராஜபக்சே நியமித்தார். பின்னர் கோத்தப்பய ராஜபக்சேவும் பதவி விலக நேரிட்டது. அவரது பொறுப்பை ரணில் ஏற்றார். தற்போது இலங்கையின் பிரதமராக தினேஷ் குணவர்த்தன பொறுப்பு வகிக்கிறார். இந்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.