ஆஸ்திரேலியாவின் முன்னணி மற்றும் மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டு நிறுவனமாக மெடிபேங்க் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் திகழ்கிறது. இந்த நிறுவனம் வியாழன் அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, அடையாளம் தெரியாத நபரால் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் தரவுகள் திருடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த மருத்துவ காப்பீட்டு நிறுவனத்தில், ஆறில் ஒரு பங்கு ஆஸ்திரேலியர்கள் உறுப்பினராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 4 மில்லியன் வாடிக்கையாளர்களில், பல பிரபலங்களின் தகவல்களும் திருடப்பட்டுள்ளதாக எச்சரிக்கை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெடிபேங்க் நிறுவனத்தில், வாடிக்கையாளர்களின் உடல்நிலை, மருத்துவக் குறிப்புகள் மற்றும் பிற தனிப்பட்ட தகவல்கள் சேமிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், 100 வாடிக்கையாளர்களின் தகவல் தரவுகள் கசிந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அத்துடன், நிறுவனத்தின் கணக்குப்படி, 200 ஜிகாபிட் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அத்துடன், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஆஸ்திரேலிய பெடரல் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிக்கைக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் மூலம் தகவல் வந்துள்ளது. அதில், பிரபலங்கள் மற்றும் பணக்காரர்களின் தகவல்களை வெளியிட போவதாகவும், அதை தடுக்க பணம் தர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தகவல் திருட்டில் ஈடுபட்டவர்கள் வாடிக்கையாளர்களின் தகவல்களைக் கொண்டு, வங்கிக் கணக்குகளை கையாள நேரிடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அதன் மூலம் பணத்திருட்டிலும் ஈடுபட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் திருட்டு சம்பவம் உலக அரங்கில் பேசு பொருளாகி உள்ளது. அத்துடன், இணையதளத்தில் இரட்டை நிலை பாதுகாப்பு அம்சம் குறித்த அவசியம் மற்றும் விழிப்புணர்வை இந்த தகவல் திருட்டு சம்பவம் ஏற்படுத்தி உள்ளது.