''இந்தியாவின் ஆயுர்வேதத்தால் எனக்கு பார்வை கிடைத்து விட்டது; இந்த மருத்துவ சிகிச்சைக்காக என் உணவுப்பழக்கத்தையே மாற்றி விட்டேன்,'' என்று கேரளா மாநிலம் கூத்தாட்டுக்குளம் ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கென்யா முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்காவின் மகள் ரோஸ்மேரி ஒடிங்கா தெரிவித்தார்.
ரோஸ்மேரி ஒடிங்காவுக்கு, 2017ல் 39 வயதில் திடீரென மூளை ரத்தநாள பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பார்வை முற்றிலும் பாதிக்கப்பட்டது. தென் ஆப்ரிக்கா, அமெரிக்கா, இஸ்ரேல், ஜப்பான், சீனா நாடுகளில் பலமுறை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டும் பார்வை கிடைக்கவில்லை.
இந்நிலையில் இந்தியாவின் கூத்தாட்டுக்குளம் ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கண் மருத்துவமனைக்கு மகளை சிகிச்சைக்காக ஒடிங்கா அனுப்பினார். இங்கு 2019ல் ஒரு மாதம் தங்கி சிகிச்சை பெற்ற பின் பார்வை மேம்பட்டதும், ரோஸ்மேரி கென்யா திரும்பினார். தொடர்ந்து ஆயுர்வேத மருந்துகள் எடுத்துக்கொண்ட அவருக்கு, இழந்த பார்வை கிடைத்தது.
இதனால் மகிழ்ச்சி அடைந்த ரோஸ்மேரி, கென்யா நாட்டின் தொலைகாட்சிகளில் இந்தியாவின் மருத்துவ முறை, உணவு முறைகளால் தான் பார்வை பெற்ற விதத்தை விளக்கினார்.
முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்காவும், இந்தியாவின் மருத்துவ பாரம்பரியம் குறித்து பல இடங்களில் பெருமையுடன் பேசி வந்தார். தற்போது மூன்றாவது முறையாக சிகிச்சை பெற ரோஸ்மேரி ஒடிங்கா, தந்தை ரெய்லா ஒடிங்காவுடன் கூத்தாட்டுக்குளம் ஸ்ரீதரீயம் வந்து தங்கியுள்ளார்.
கேரளாவில் கோட்டயத்தில் இருந்து 38 கி.மீ., துாரத்திலும், எர்ணாகுளத்தில் இருந்து 49 கி.மீ., துாரத்திலும் மருத்துவமனை உள்ளது. நாட்டின் முதல் ஆயுர்வேத கண் மருத்துவமனையான ஸ்ரீதரீயம் 25 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டு, என்.ஏ.பி.எச்., அங்கீகாரம் பெற்று செயல்படுகிறது.