கடந்த சில வாரங்களாக சரிவு நிலையில் இருந்த பங்குச்சந்தை, சில நாட்களாக ஏற்றம் கண்டு வருகிறது. அந்த வகையில், இன்று காலை மீண்டும் 60,000 புள்ளிகளை கடந்து சென்செக்ஸ் குறியீட்டு எண் இருந்தது. வாரத்தின் முதல் நாளான இன்று, தொடக்கத்திலேயே பங்குச் சந்தை ஏற்றத்துடன் ஆரம்பித்தது. கடந்த வார இறுதியில், 59959.85 புள்ளிகளில் சென்செக்ஸ் நிறைவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை 9:30 மணி அளவில், மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 584.9 புள்ளிகள் உயர்ந்தது. எனவே, மீண்டும் 60000 புள்ளிகளை கடந்து வர்த்தகம் ஏற்பட்டது. இன்று காலையில், சென்செக்ஸ் குறியீட்டு எண் 60544.75 ஆக இருந்தது. தேசிய பங்குச் சந்தையிலும் உயர்வு காணப்பட்டது. இன்று நிஃப்டி குறியீட்டு எண் 154.95 புள்ளிகள் உயர்ந்து, 17941.75 ஆக இருந்தது.
உலகளாவிய முறையில் பங்குச் சந்தையில் நேர்மறையான போக்கு ஏற்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தையின் அனைத்து துறைகளிலும் ஏற்றங்கள் நிகழ்ந்தன. குறிப்பாக, மருந்து சார்ந்த துறையில் 1% வரை ஏற்றம் காணப்பட்டது. இன்று மதியம் 1:35 மணி அளவில், சென்செக்ஸ் 659.21 புள்ளிகள் உயர்ந்து, 60619.06 புள்ளிகளில் வர்த்தகமானது. அதே வேளையில், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, 181.70 புள்ளிகள் உயர்ந்து 17968.5 புள்ளிகள் வர்த்தகம் ஆனது.
இன்றைய வர்த்தகத்தில், டைட்டன், எம் அண்ட் எம், ஹிந்துஸ்தான் யுனிலீவர், டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி, எல் அண்ட் டி, விப்ரோ, ஐடிசி, நெஸ்ட்லே இந்தியா, ஏசியன் பெயின்ட்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன. அதே வேளையில், டாடா ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.