ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சூப்பர் ஹெவி ராக்கெட் ஐந்தாவது சோதனைப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு புதிய மைல்கல் நிகழ்ந்துள்ளது. குறிப்பாக, இந்த ராக்கெட்டின் பூஸ்டர் பகுதி ஏவுதளத்திலேயே பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது. டெக்சாஸ் மாநிலத்தின் போகா சிகா பகுதியில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த ராக்கெட், ஏழு நிமிடங்களில் பூமிக்கு திரும்பியது. ஏவுதளத்தில் நிறுவப்பட்டிருந்த இயந்திரக் கைகள், "சாப்ஸ்டிக்ஸ்" என்று அழைக்கப்படுகின்றன. இந்த கைகள் மூலமாகவே ராக்கெட்டின் பூஸ்டர் பகுதி பாதுகாப்பாக பிடிக்கப்பட்டது. இது விண்வெளி துறையில் புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்துள்ளது.
ராக்கெட்டின் பூஸ்டர் பகுதியை மீண்டும் பயன்படுத்துவதன் மூலம், விண்வெளிப் பயணத்தின் செலவைக் குறைக்க முடியும். அந்த வகையில், இந்த சாதனை, விண்வெளி ஆராய்ச்சியில் புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை எந்தவொரு விண்வெளி நிறுவனமும் இவ்வளவு விரைவாக ராக்கெட்டின் பூஸ்டர் பகுதியை மீட்க முடியவில்லை என்பது நினைவு கூறத்தக்கது. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், இந்த ராக்கெட்டை ஒரு மணி நேரத்திற்குள் மீண்டும் ஏவ முடியும் என தெரிவித்துள்ளார். ராக்கெட்டின் சில பாகங்களில் சிறிய அளவிலான சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், முழுமையாக சரிசெய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.