அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இணைந்து உருவாக்கியுள்ள NISAR செயற்கைக்கோளின் ரேடார் ஆண்டனா பிரதிபலிப்பு கருவி, தனது நீண்ட இந்திய பயணத்தை தொடங்கியுள்ளது. இந்த கருவி, நாசாவின் C-130 ஹெர்குலஸ் போக்குவரத்து விமானம் மூலம் 24,500 கடல் மைல் தூரம் பயணித்து, கலிபோர்னியா, ஹவாய், குவாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய இடங்களில் நிறுத்தங்களை மேற்கொண்டு, இறுதியாக இந்தியாவின் பெங்களூருவை அடையும்.
NISAR செயற்கைகோள், தனித்துவமான செயற்கை துளை ரேடார் (SAR) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பூமியின் சுற்றுச்சூழல் அமைப்புகள், பனிக்கட்டிகள், கடல் மட்டங்கள் மற்றும் இயற்கை பேரிடர்கள் போன்றவற்றைக் கண்காணிக்கும். இந்த செயற்கைக்கோள் மூலம் பெறப்படும் தரவுகள், உலகளாவிய அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். ஆண்டெனா பிரதிபலிப்பு கருவியுடன் தொடர்புடைய சில தொழில்நுட்ப சிக்கல்களால் NISAR செயற்கைக்கோள் ஏவுதல் சற்று தாமதமானது. தற்போது, இந்த செயற்கைக்கோள் 2025 பிப்ரவரி மாதம் விண்ணில் ஏவப்பட உள்ளது.