ஒப்பாரி

June 26, 2022

ஒருவருடைய நெருங்கிய உறவினர்கள் இறக்கும் போது, இழப்பின் துயரம் தாங்கிக் கொள்ள முடியாமல் பெண்கள் இறந்தவர்களின் சிறப்புகளை பாடலாகப் பாடுவர். அதுவே ஒப்பாரியாகும்.

தமிழர்கள் வாழ்க்கையில் இசையானது பின்னிப்பினைந்து காணப்படுகின்றது. வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திற்கும் தனித்தனிப் பாடல் வடிவங்கள் தமிழில் உள்ளன. அவற்றுள், மனித வாழ்வின் முதல் மற்றும் இறுதி நிமிடங்களில் ஒலிக்கும் தாலாட்டு மற்றும் ஒப்பாரி ஆகியன மிகவும் சிறப்பு வாய்ந்தவை யாகும். வாழ்வின் முன்னுரை தாலாட்டு என்றால், முடிவுரை ஒப்பாரியாகும். தாலாட்டு கலங்கரை விளக்கமானால், ஒப்பாரி நினைவுச் சின்னமாகும். தாய், தந்தை, கணவன், பிள்ளை, உற்றார், உறவினர் என்று எவரேனும் இறந்து விட்டால், ஒருவருடைய உள்ளத்தில் எழுகின்ற துன்பஉணர்வை வெளிக்காட்ட ஒப்பாரி பாடப்படுகிறது. இறந்தவர்களின் வாழ்க்கையைப் பற்றித் தெரியாதவர்கள் கூட அப்பாடல் மூலம் அவருடைய வரலாற்றினை அறிய முடியும். அந்த வகையில் ஒப்பாரி தனி மனிதனின் வாழ்வியலோடு சேர்த்து ஒரு சமூகத்தின் மரபு வழக்கங்களையும் எடுத்துச் சொல்வதாக அமைகின்றது.

ஒப்பாரி என்பது ஒப்பு + ஆரி எனப் பிரிந்து “அழுகைப் பாட்டு” எனப் பொருள் படுகின்றது. அதாவது ஒப்பு சொல்லி ஆர்ப்பரித்து அழுவது என்பது ஒப்பாரியின் விளக்கமாகும். ஒருவருடைய நெருங்கிய உறவினர்கள் இறக்கும் போது, இழப்பின் துயரம் தாங்கிக் கொள்ள முடியாமல் பெண்கள் இறந்தவர்களின் சிறப்புகளையும், அவர்களை இழந்ததால் தான் அடையப் போகும் துன்பத்தையும் பாடலாகப் பாடுவர். அதுவே ஒப்பாரியாகும்.

ஒப்பாரிப் பாடல்களின் வடிவங்கள் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மற்றும் தமிழர்கள் வாழும் இலங்கை, மலேசியா முதலான நாடுகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒப்பாரிப் பாடல்களை, பாடப்படும் சூழல் அடிப்படையில், இறந்தவுடன் பாடும் பாடல், இறுதிச் சடங்கில் பாடப்படும் பாடல், இறந்த எட்டாம் நாள், பதினாறாம் நாள், இருபத்திரண்டாம் நாள், ஆண்டுக்கு ஒருமுறை இறந்த நாள் வரும் போது, இறந்து பல ஆண்டுகள் ஆகியும், பலருடைய இறப்பில் பங்கேற்கும் போது பாடப்படும் பாடல் எனப் பலவகையாகப் பிரித்துக் கொள்ளலாம். மேலும், துன்பத்தின் வடிகாலாக இருக்கின்ற ஒப்பாரிப் பாடல்களின் இசை, விளம்பமும் மத்யமும் கலந்த ஒரு லய அமைப்பில், சோகத்தை உணர்த்தும் முகாரி, ஆகிரி முதலான இராகச் சாயலுடன் விளங்குகின்றது.

ஒப்பாரி பாடல்கள் உணர்வு மயமான சூழலில் பாடப்பட்டாலும், அதிலும் வடிவ ஒழுங்கு, அணியமைப்பு, எதுகை, மோனை, இயைபு, முரண், கற்பனை நயம் எனப் பல அழகுகள் உள்ளன. ஒப்பாரிப் பாடல்களின் மூலமாகவே பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ள நடைமுறை சடங்குகளைப் பெரிதும் அறிய முடிகின்றது. முக்கியமாக, பெண் சமுதாயத்தின் நிலையினை ஒப்பாரிப் பாடல்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன. கணவர் உள்ளவரை பூவும், பொட்டும் வைத்திருந்த நிலை மாறுவதையும், கணவர் இறந்த பின்னர் தன்னைத் தீய சகுணமாக மக்கள் கருதுவதையும், மங்கல நிகழ்வுகளில் பங்கேற்பதைச் சமூகம் விரும்பாததையும் பல ஒப்பாரிப் பாடல்கள் பதிவு செய்துள்ளன. எனவே , ஒரு சமூக மரபின் கண்ணாடியாக ஒப்பாரி இருக்கின்றது.

இன்று, தமிழகத்தின் பல்வேறு தொல்லியல் களங்களில் கிடைக்கப் பெறும் முதுமக்கள் தாழிகள் ஆதி காலத்தில் இருந்தே இறப்பிற்கான பல்வேறு நம்பிக்கைகளும் சடங்குகளும் தமிழர்களிடம் இருந்து வந்துள்ளதை உறுதி செய்கின்றன. இறந்தவர் பயன்படுத்திய பொருட்களோடு அவரைப் புதைக்கும் வழக்கம் என்பது ஒருவகையில் ஒப்பாரி பாடும் வழக்கத்தினையும் உறுதி செய்கின்றது. எவ்வாறெனில், இறப்பிற்கான சடங்குகள் குறைந்து காணப்படும் தற்காலத்திலேயே ஒப்பாரிகள் பாடப்படும் போது, பெரும் சடங்குகள் இருந்துள்ள தாழிகள் காலத்தில் ஒப்பாரி மிகவும் செழித்திருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்களின் கருதுகோள். அதனை உறுதிசெய்யும் விதத்தில், ‘கையறுநிலைப்பாடல்’, ‘புலம்பல்’, ‘இரங்கற்பா’, ‘சாவுப்பாட்டு’, ‘இழவுப்பாட்டு’, ‘அழுகைப்பாட்டு’ என பல்வேறு பெயர்களில் இலக்கியத்தில் ஒப்பாரி பதிவு செய்யப்பட்டுள்ளது.

“இளிவே இழவே அசைவே வறுமை யென
விளியில் கொள்கை அழுகை நான்கே ”

என்று அழுகைப்பாட்டிற்கு தொல்காப்பியம் இலக்கணம் கூறுகிறது.

“வெற்றி வேந்தன் விண்ணகம் அடைந்தபின்
கற்றோர் உரைப்பது கையறு நிலையே “

எனப் பன்னிரு பாட்டில் கையறு நிலைக்கு விளக்கம் தருகிறது. வாய்மொழியாக இருந்து வந்த ஒப்பாரியின் பழமையான இலக்கியச் சான்றுகளாக, பாரி இறந்ததும் அவன் மகள் “அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின் ..... என்தை யுமிலமே ” எனப் பாடும் புறநானுற்றுப் பாடலும், அதியமான் இறந்த பிறகு பாடப்பட்ட

“சிறியகள் பெறினே எமக்கீயு மன்னே
பெரியகள் பெறினே யாம்பாடத் தான் மகில்துண்ணும்”

என்ற பாடல் வரிகளும் திகழ்கின்றன. மேலும், கம்பராமாயணத்தில்,
இராவணன் தனது மகனின் இறப்பில், “மகனே ! எனக்கு நீ செய்யத் தக்க இறுதிக்
கடன்களை எல்லாம் நான் உனக்கு செய்யும் நிலைமையை அடைந்தேன்.
என்னை விட இழிந்தவர்கள் யாருமில்லை” என்று புலம்புவதாக அமைந்த

'சினத்தொடும் கொற்றம் முற்ற,
இந்திரன் செல்வம் மேவ,
நினைத்தது முடித்து நின்றேன்;
நேரிழை ஒருத்தி நீரால்,
எனக்கு நீசெய்யத்தக்க கடன் எலாம்,
ஏங்கி ஏங்கி, உனக்கு
நான் செய்வதானேன்! என்னின்
யார் உலகத்து உள்ளார்?'

என்ற பாடலும், வரீகவிராயர் இயற்றிய ”அரிச்சந்திர புராணம்” என்னும் நூலில்
உள்ள “சந்திரமதி புலம்பல்” என்ற பகுதியும் ஒப்பாரி பாடலின் மேம்பட்ட
இலக்கிய வடிவங்களாகப் போற்றப்படுகின்றன.

மேலும், ஒப்பாரியின் போது பறை மற்றும் உறுமி ஆகிய இசைக் கருவிகளைத் தமிழர்கள் இசைத்து வந்துள்ளது ஒப்பாரி பாடல்களில் வரும் வரிகள் மூலமாக அறிய முடிகின்றது. உதாரணமாக “பறையொலிக்க போனதென்ன” என்றும் “உறுமிச் சத்தம் கேட்கும் நாள் வருமோ” என்றும் பாடப்படும் வரிகள் இறப்பிற்கென்றே தனி இசையும், இசைக்கருவிகளும் இருந்ததை உறுதி செய்கின்றன. இன்றைய நாட்களிலும் இறுதி ஊர்வலத்தில் பறை (தப்பு) இசைக்கப்படுவது ஒப்பாரியின் மரபுவழித் தொடர்ச்சியை உணர்த்துகின்றது. மேலும், ஒப்பாரி என்பது ஒரு தொழில்முறையாகவும் பல ஆண்டுகளாகத் தமிழகத்தில் இருந்து வந்துள்ளது. அதாவது, நெஞ்சில் அடித்துப் பாடும் வழக்கமான ஒப்பாரியைப் பாடுவதற்கென்றே கூலி கொடுத்து ஆட்கள் வரவழைக்கும் வழக்கம் இருந்துள்ளது. அதை வைத்தே “கூலிக்கு மாரடிக்கும் கூட்டம்” என்ற ச சொற்றொடர் உருவாகியுள்ளது. மேலும், கூலிக்கு மாரடிப்பதைப் பற்றி கிராமப்புற கதை ஒன்று உண்டு. ஒரு இழவு வீட்டில் எல்லோரும் அழுது கொண்டு இருக்கிறார்கள். அந்த வீட்டில் பாகற்காய் பந்தல் ஒன்று இருக்கிறது. அங்கே கூலிக்கு மாரடித்து அழ வந்த, இரண்டு பெண்டுகளில் ஒருவள் அழுகையோடு அழுகையாக பாடும்போது,
பந்தலிலே பாவக்கா
பந்தலிலே பாவக்கா
என்று குறிப்பாக இன்னொருத்திக்கு தெரிவிக்கிறாள். அவளும்,
போகையிலே பாத்துக்குவோம்
போகையிலே பாத்துக்குவோம்
என்று பதில் பாட்டு பாடுகிறாள். இதனைக் கேட்டதும், வீட்டுக்கார அம்மாள்,
அது விதைக்கல்லோ விட்டிருக்கு
அது விதை க்கல்லோ விட்டிருக்கு
என்று எதிர்பாட்டு பாடினாளாம். இதுவே அந்த கதை . இதன் மூலம் ஒப்பாரி தொழில் முறையாக பாவிக்கப் பட்டிருப்பதையும் ஒப்பாரி பாடுவோரின் நிலையையும் அறிய முடிகின்றது.

இவ்வாறு, தமிழர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த, ஒப்பாரி சொல்லி அழுதல் என்னும் வழக்கம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உலகில், நாகரிக மயக்கத்தில் பரவலாக மறைந்து வருகிறது. இப்போது சிற்றூர்ப்புறங்களில் மட்டும் இவ்வடிவம் காணப்படுகிறது. நெஞ்சை உருக்கும் இக்கலை வடிவம் மேற்கூறியதைப் போல சமூக நடப்பியலைத் தாங்கி உள்ளதால் இதனைப் பதிவு செய்வதும், பாதுகாப்பதும் காலத்தேவை யாகும். பெரிதும் பதிவுய்யப்படாமல் உள்ள வாய்மொழி ஒப்பாரிகளை பதிவு செய்ய முன்வருவோம்.

7
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu