அமைச்சர் PTR அறிவிப்பு: ஸ்டார்ட்அப்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை, மூன்று ஆண்டுகளில் ரூ.15 லட்சம் வரை கிளவுட் செலவு திருப்பித் தரப்படும்.
தமிழ்நாடு ஸ்டார்ட்அப் டேட்டா வவுச்சர் திட்டம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 2025–26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம், கிளவுட் உள்கட்டமைப்பு செலவுகளை குறைத்து ஸ்டார்ட்அப்கள் விரைவாக வளர்ச்சியடையவும் புதுமைகள் செய்யவும் உதவும்.
திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஸ்டார்ட்அப்பிற்கும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம், மொத்தம் மூன்று ஆண்டுகளில் ரூ.15 லட்சம் வரை கிளவுட் சேவைத்தொகை திருப்பி வழங்கப்படும். மேலும் AWS, Google Cloud, Microsoft Azure, Oracle, RailTel, Sify போன்ற உலகளாவிய கிளவுட் நிறுவனங்களிடமிருந்து 5% முதல் 40% வரை தள்ளுபடி கிடைக்கும். இதற்காக ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. StartUpTN, iTNT Hub, ELCOT–STPI FinBlue ஆகிய அமைப்புகள் பரிந்துரைக்கும் ஸ்டார்ட்அப்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும். இதன் மூலம் இந்தியாவில் ஸ்டார்ட்அப்களுக்கு உகந்த மாநிலங்களில் தமிழ்நாடு முன்னணியில் இருப்பதை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.














