இந்திய ரயில்வே துறை நவீனமயமாக்கலை நோக்கி நகர்ந்து வருகிறது. அதன் பகுதியாக, கற்கள் நிறைந்த தண்டவாளங்கள், கற்கள் அல்லாதவையாக மாற்றப்படுகின்றன.
ரயில் தண்டவாளங்களில், சிறந்த முறையிலான கட்டுப்பாடு மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை வழங்க, அதிக அளவிலான கற்கள் போடப்பட்டு இருக்கும். ஆனால் இந்தக் கற்களில், அதிக அளவிலான கழிவுகள் தேங்கும் நிலை உள்ளது. மேலும், இதனைத் தொடர்ந்து கண்காணிக்கவும் பராமரிக்கவும் வேண்டி உள்ளது. எனவே, நவீன தொழில்நுட்பத்தின் மூலம், கற்கள் அல்லாத தண்டவாளங்களை குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களை தூய்மையாக மாற்றும் பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. குறிப்பாக, சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகை தரும் ரயில் நிலையங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. கற்கள் இல்லை என்றாலும் பாதுகாப்பு அம்சத்தில் குறைகள் நேராது என்று சொல்லப்பட்டுள்ளது.மேலும், கவச் எனப்படும் மோதலை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பமும் இந்தியன் ரயில்வேயில் கொண்டுவரப்பட்டுள்ளது. உலகிலேயே மலிவு விலையில் சிறந்த பாதுகாப்பு தரும் தொழில்நுட்ப அம்சமாக இது அறியப்படுகிறது.