தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை காரணமாக, தினசரி மின்தேவை சராசரியாக 2 ஆயிரம் மெகாவாட்டுக்கு மேல் குறைந்துள்ளது.
தமிழகத்தில் மின்தேவை தினமும் சராசரியாக 14 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இது கோடைகாலத்தில் அதிகபட்சமாக 16 ஆயிரம் மெகாவாட்டாகவும், குளிர்காலத்தில் 12 ஆயிரம் மெகாவாட்டாகவும் இருக்கும். கடந்த மாதம் தினசரி மின்தேவை சராசரியாக 14,500 மெகாவாட் என்ற அளவில் இருந்தது.
மேலும், இம்மாத தொடக்கத்தில் இருந்து வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், வீடுகளில் ஏசி, மின்விசிறி உள்ளிட்டவற்றின் பயன்பாடும் குறைந்துள்ளது. இந்நிலையில், தினசரி மின்தேவை 11,200 முதல் 11,600 மெகாவாட் என்ற அளவுக்கு குறைந்துள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.