18 ஆண்டில் 14 தலைமை தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனங்களை உச்ச நீதிமன்றத்தில் 'கொலீஜியம்' முறை இருப்பது போல் தேர்வு செய்ய உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை, நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. அப்போது நீதிபதிகள், தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக அரசியல் சாசனத்தின் 324வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, தலைமை தேர்தல் ஆணையர் என்பவர் ஆறு ஆண்டுகள் அல்லது 65 வயது வரை பதவியில் இருக்கலாம்.
இந்தப் பதவியில் முன்னாள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளே நியமிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு 65 வயதை நெருங்கும் நேரத்தில் பதவி அளிக்கிறார்கள். கடந்த 18 ஆண்டுகளில் எந்த ஒரு தலைமை தேர்தல் ஆணையரும், இரண்டாண்டு வரை பதவியில் இருந்ததில்லை. மத்தியில் ஆளும் கட்சிகள் தங்களுக்கு சாதகமாக இருக்கும் வகையில் நியமனங்களை செய்து வருகின்றன. இதில், கட்சிகளுக்கு இடையே எந்த வேறுபாடும் இல்லை என்று அமர்வு கூறியுள்ளது. வழக்கின் விசாரணை இன்றும் தொடர்கிறது.