பச்சை குத்தியவருக்கு ராணுவத்தில் சேர வாய்ப்பு அளித்தும், அதனை 2 வாரத்தில் அகற்ற கெடு விதித்தும் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராணுவப் பிரிவில் சேர சென்ற இளைஞர் ஒருவர், தனது வலது கையில் மதம் தொடர்பான பச்சையை குத்தி இருந்ததால் தகுதி இழப்பு செய்யப்பட்டார். இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், 'பச்சை குத்தியதை அகற்ற லேசர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள தயாராக இருக்கிறேன். அதை தவிர உடல் தகுதியில் எந்த குறைபாடும் கிடையாது. எனவே, என்னை ராணுவத்தில் சேர்க்க உத்தரவிட வேண்டும்' என்று கோரினார்.
இதற்கு ராணுவம் தரப்பில், சல்யூட் அடிக்கும் வலது கையில் பச்சை குத்தியிருப்பதால், ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் விதிமுறைகளின்படி, அவரை துணை ராணுவத்தின் எந்த பிரிவிலும் சேர்க்க முடியாது என்று கூறப்பட்டது. அப்போது நீதிபதிகள், கையில் குத்தியுள்ள பச்சையை அகற்றி விட்டு 2 வாரங்களுக்குள் மீண்டும் மருத்துவ பரிசோதனைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.