ராணுவ வீரர்களின் சம்பளம் குறித்து அமைச்சர் குழு அறிக்கை வெளியிடலாம் என தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ராணுவ வீரர்களின் சம்பளம், ஓய்வூதியம் உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு செய்ய முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, அப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த காங்கிரசின் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சர்கள் குழு, 2008ல் அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிடம் தன் அறிக்கையை ஒப்படைத்தது.
இந்த அறிக்கை தொடர்பான தகவல்களை தெரிவிக்கும்படி, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கை நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுடன் தொடர்புள்ளதால் விபரங்களை வெளியிட முடியாது என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், எஸ்.ஒய். சயூர் என்பவர் கடந்தாண்டு ஜனவரியில் மத்திய தகவல் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், ராணுவத்தினருக்கான சம்பளம், ஓய்வூதியம் பற்றிய அறிக்கை ஏற்கனவே வகைப்படுத்தப்பட்ட ஆவணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலான பகுதிகளை ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதனால், முழு அறிக்கை விபரங்களை வெளியிட உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதையேற்ற மத்திய தகவல் ஆணையம் அமைச்சர்கள் குழுவின் அறிக்கை விபரங்களை வெளியிடுவது குறித்து ஆராயும்படி பிரதமர் அலுவலகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.