செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. வடகிழக்கு பருவமழை மற்றும் 'மாண்டஸ்' புயலால் பெய்த தொடர்மழை காரணமாக சென்னை குடிநீர் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்ததை தொடர்ந்து ஏரியில் இருந்து 3,000 கனஅடி வரை உபரிநீர் திறக்கப்பட்டது. பின்னர் மழை குறைந்ததால் படிப்படியாக தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது மழை முழுவதும் ஓய்ந்துள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்துவிட்டது. இதையடுத்து ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளது. இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு 246 கனஅடி மட்டும் தண்ணீர் வருகிறது. சென்னை குடிநீர் தேவைக்காக 130 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.