தமிழகத்தில் முதல்முறையாக ஈரோட்டில், நடமாடும் எரியூட்டும் தகன வாகன சேவை துவங்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகராட்சி மற்றும் ஈரோடு ரோட்டரி ஆத்மா மின் மயான அறக்கட்டளை சார்பில் ஈரோடு காவிரி கரையில் 14 ஆண்டுகளாக மின் மயானம் செயல்படுகிறது. கிராமப்பகுதியில் இறந்தவர்களின் உடலை எரியூட்டும் போது ஏற்படும் சிரமத்தை தவிர்க்க நடமாடும் எரியூட்டும் வாகனத்தை ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம் தற்போது அறிமுகம் செய்துள்ளது.
இந்த சேவையை துவக்கி வைத்து, ரோட்டரி ஆத்மா அறக்கட்டளை தலைவர் ராஜமாணிக்கம் கூறுகையில், ரோட்டரி சங்க நன்கொடையாளர்கள் உதவியுடன், தமிழகத்தில் முதன்முறையாக ஈரோட்டில் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் மூலம் எரியூட்டினால் 1 மணி நேரத்தில் அஸ்தியை பெறலாம். கிராம மக்கள் பயன் பெற 7,500 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும் என்று கூறினார்.