தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 3 ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது வரும் 29ஆம் தேதி வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்கிழக்கு வங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் மூன்றாம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. வலுப்பெற்ற இந்த புயலுக்கு மிக் ஜாம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.